வீட்டு தபால் பெட்டியில் வீசப்பட்ட அழைப்பிதழ்! மதுரை பயணத்தை ரத்து செய்த கனிமொழி! அப்செட் பின்னணி!
சென்னை: மதுரையில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளாததற்கு காரணம், அவருக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப்படாததே என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள். ஆராய்ச்சியாளர்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள், பெண்கள். மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்நூலகமானது தென் தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக திகழும் என பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் இந்த நூலகத்தின் திறப்பு விழாவுக்கு கனிமொழி எம்.பி. வராதது திமுகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. கருணாநிதியின் கலை இலக்கிய வாரிசாக கருதப்படும் கனிமொழி தான் இந்த நூலக திறப்பு விழாவில் முதல் ஆளாக கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ மதுரை பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னையில் இருந்துவிட்டார்.
இதற்கான காரணம் பற்றி விசாரித்ததில், கருணாநிதி நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வீட்டு தபால் பெட்டியில் வைத்து விட்டுச் சென்றதே எனக் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவோ, அல்லது பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளோ தன்னிடம் திறப்பு விழா பற்றியோ அழைப்பிதழ் குறித்தோ ஒரு வார்த்தை கூடச் சொல்லாதது கனிமொழிக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா விவகாரத்தில் டி.ஆர்.பாலுவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கால் பங்கு கூட கனிமொழிக்கு கொடுக்கப்படவில்லை என்பது அவரது தரப்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் தான் அவர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதேபோல் பேராசிரியர் அருணனுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட விவகாரத்திலும், அழைப்பிதழில் மதுரை எம்.பியின் பெயர் விடுபட்டதும் பெரிய சொதப்பலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications