கனிமொழி நடத்தும் சென்னை சங்கமம் கலைவிழா.. நம்ம ஊரு திருவிழா இன்று மாலை துவக்கி வைக்கிறார் முதல்வர்
சென்னை: தமிழர் திருநாளாம் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (தை 1 - ஜனவரி 15) அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில், சென்னை சங்கமம் எனப்படும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வானது, இந்த வருடமும் பொங்கல் விழாவின்போது நடைபெற உள்ளது. திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. முன்னின்று இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்துகிறார்.

கனிமொழி எம்பி
தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் வகையில் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 'சென்னை சங்கமம் - 2026' கலை விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி. நேற்று வழங்கினார்.
அந்தவகையில், இந்த ஆண்டும் கலை நிகழ்ச்சிகளை இன்று மாலை 6 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையில் 20 இடங்களில் ஜன.15 முதல் 18ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தொடக்க விழாவை அடுத்து, திருவிழா சென்னை முழுவதும் 20 இடங்களில் நடைபெறுகிறது. இந்த கலை நிகழ்ச்சிகள் 15.1.2026 முதல் 18.1.2026 வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன. மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம் போன்ற 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர உள்ளனர்.
வெற்றி பொங்கலாக பொங்கட்டும்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த பதிவில், "சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.
நாளை (இன்று) சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!," இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவைதான் அந்த 20 இடங்கள்
தொடக்க விழாவை அடுத்து, 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம், ராஜரத்தினம் விளையாட்டரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம்- அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா,
அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் 15.1.2026 முதல் 18.1.2026 வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன.












Click it and Unblock the Notifications