மீண்டும் தொடங்கியது.. கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கிய கனமழை காரணமாக பல ஊர்களில் வெள்ளம் ஏற்பட்டது. முக்கியமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தற்போது வடிந்துள்ளது. அதேபோல் அங்கு மழையும் நின்றுள்ளது. இதனால் இறுதிக்கட்ட மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

மீட்பு பணிகள்
இந்த நிலையில்தான் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் கடல் அருகே இந்த தாழ்வு மண்டலம் செல்ல வாய்ப்பு உள்ளது. அங்கு நிலைகொண்டு இந்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும்.

தாழ்வு மண்டலம்
பின் அது மேலும் வலிமை அடைந்து நாளை மேற்கு-வடமேற்கு திசையில் சென்று ஆந்திர அருகே கரையை கடக்கும். இதனால் நேற்று தென் மாவட்டங்களிலும் வடகடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. முக்கியமாக கன்னியாகுமரியில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியகுமாரியில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம்
குமரக்கோவில், விளவங்கோடு, திங்கள் சந்தை, தக்கலை, நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகள், களியக்காவிளை, மார்த்தாண்டம் என பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக பல நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் வெளியேறி சாலைகளில் வெள்ளம் புகுந்தது. பல வீடுகள் இதனால் நீரில் மூழ்கின. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 47 முகாம்களில் 733 குடும்பங்களைச் சேர்ந்த 2449 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெள்ளம்
பல இடங்களில் இன்னும் மீட்பு பணிகளை கூட மேற்கொள்ள முடியாத வகையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரியில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும். காற்று வேகமாக வீசும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

வேறு மாவட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் அதிகாலையில் மழை தொடங்கியது. காலை முதல் தோவாளை முப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, தேனி, நெல்லை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications