Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு பார்த்ததுண்டா.. இது போன்ற தலைவனை.. அதனால்தான் அவர் கர்ம வீரர் காமராஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுன்சிலராக இருப்பவர்களுக்கே கோடி கோடியாக சொத்துக்கள் இருக்கும் இன்றைய கால கட்டத்தில் கதர் சட்டையில் 100 ரூபாயும் வங்கிக்கணக்கில் 125 ரூபாயும் மட்டுமே வைத்திருந்த சொத்துக்கு சொந்தக்காரர் 10 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக இருந்தவர் என்றால் நம்ப முடிகிறதா? அவரைப்போல ஒரு தலைவரை நாடு பார்த்திருக்காது. அதனால்தான் அவர் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார். காமராஜரின் 121வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரது சிறப்புகளை அறிந்து கொள்வோம்.

மாமனிதர் பிறந்தநாள்: விருதுபட்டி..இன்றைய விருதுநகரில் 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி ஒரு மாமனிதர் பிறந்தார். குமாரசாமி சிவகாமி அம்மாள் தம்பதியர் காமாட்சி என்று பெயர் வைக்க ராசா என்று அம்மா செல்லமாக கூப்பிட இரண்டும் இணைந்து காமராஜர் என வரலாற்றில் இடம்பெறக்கூடிய பெயராக மாறியது. அப்பாவின் மரணம் அவரது படிப்பிற்கு தடையாக அமைந்தது. தொடக்க கல்வி மட்டுமே படித்த காமராஜர் குடும்பத்தில் வசதியின்மையால் துணிக்கடையில் வேலைக்கு செல்ல போகவேண்டியதாயிற்று. அரசியல் தலைவர்களின் பேச்சு காமராஜரை ஈர்க்கவே, 16ஆவது வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

Karmaveerar The Life and Legacy of Kamarajar: Kamarajars life and career

அரசியல் பயணம்: 1920ஆம் ஆண்டு காமராஜரின் அரசியல் பயணம் தொடங்கியது. 1930ஆம் ஆண்டு தனது 26 வயதில் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற காமராஜர் கைது செய்யப்பட்டு ஓராண்டுகள் கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கம்','வைக்கம் சத்தியாக்கிரகம்','நாக்பூர் கொடி சத்தியாகிரகம்' போன்ற போராட்டங்களில் பங்கேற்றார் காமராஜர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.

அரசியல் குரு: இந்திய விடுதலை வீரர் சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

தமிழக முதல்வர்: 1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. முதல்வர் பதவியில் இருந்து ராஜாஜி விலகினார். தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

செயல் தலைவர்: அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் காமராஜர். 1953-54ஆம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம். இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். இதுபற்றி சிலர் காமராஜரிடம் கேட்டபோது, என்னை எதிர்த்தவர்கள் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே அமைச்சர்களாக பதவி வகித்து அனுபவம் பெற்றிருக்கும் அவர்கள் சேவை, நாட்டுக்குப் பயன்பட வேண்டாமா என்று பதிலளித்தார்.

கல்வி கண் திறந்த தலைவர்: மதியஉணவு அளித்தால் கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார். மேலும் குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டார் . தமிழகத்தில் மூடி இருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும் 17000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு அவரே சென்று திறந்து வைத்தார்.

கர்ம வீரர் காமராஜர்: மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த அவர் பதவியைவிட மக்களின் முன்னேற்றமும் மற்றும் கட்சியின் முன்னேற்றத்தினையும் மனதில் வைத்துக்கொண்டு தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அதோடு இளைனர்களின் கையில் நாட்டினை ஒப்படைக்க வேண்டும் என்றும் சிந்தித்தார். அதே ஆண்டு அவர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆனார். அவர் சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரே நியமிக்கப்படும் அளவிற்கு அவரின் செல்வாக்கு கட்சியின் மத்தியில் இருந்தது. கிங் மேக்கராக திகழ்ந்த காமராஜரைப் போல ஒரு தலைவரை இந்த நாடு பார்த்திருக்காது.

Karmaveerar The Life and Legacy of Kamarajar: Kamarajars life and career

எளிமையான தலைவர்: வாழ்நாளில் பல உதவிகளை மக்களுக்காக செய்த மக்கள் தலைவன் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். எளிமையின் மறுமுகம் காமராஜர் : ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும் சாகும் வரை அவர் வாடகை வீட்டிலேயே வசித்தார். மேலும் கதர் ஆடையினை மட்டுமே வைத்திருந்தார் . அவரது வங்கிக்கணக்கில் இருந்தது வெறும் 125 ரூபாய்தான்.

மக்கள் மனதில் வாழும் தலைவர்: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக, காமராஜர் இருந்த போது, தமிழகம் முழுதும், கட்சி வளர்ச்சிக்காக, நிலங்களும், கட்டடங்களும் வாங்கப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம், சத்தியமூர்த்தி பவன் கட்டடம் என தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் காங்கிரஸ் அறக்கட்டளை பெயரில் வாங்கப்பட்டுள்ளன. தனக்காக எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாத தலைவர் காமராஜர் அதனால்தான் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார். கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் பொற்கால ஆட்சியை கொடுத்த தலைவர் காமராஜரைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் நிச்சயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+