கர்நாடகா:புலிகேசி நகரில் வேட்பு மனு தள்ளுபடி ஆனதற்கு காரணம்..ஓபிஎஸ் தரப்பு கொடுத்த விளக்கம் இதுதான்

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் வருகிற மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது.
கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்.. இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது.
இதனிடையே, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அன்பரசனுக்கு இரட்டை இலை சின்னமும் எந்த சிக்கலும் இன்றி கிடைக்கும் எனத் தெரிகிறது.
அதே வேளையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் தனது அணி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். அதன்படி, புலிகேசிநகர், காந்திநகர், கோலார் தங்கவயல் ஆகிய தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்களை அறிவித்தார். புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜா ஒபிஎஸ் அணி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனையின் போது இன்று புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்யப்பட்டது. காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டது. காந்திநகரில் அதிமுக வேட்பாளராக குமாரை தேர்தல் ஆணையம் அங்கிகரித்து இருப்பதாவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் அனந்தராஜாவின் மனு ஏற்கப்பட்டு இருந்தாலும், அவருக்கு அதிமுக எனக் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர் சுயேட்சை வேட்பாளராக அங்கு களம் காண்கிறார். இந்த நிலையில், இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியதாவது;-
காலையில் இருந்தே ஓபிஎஸ் நிறுத்திய வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியிட்டார்கள். யாரோ ஒருவர் கொடுத்த தவறான செய்தியை வைத்து இந்த அளவுக்கு பெரிதாக போட்டார்கள். அதிமுக சார்பாக குமார் போட்டியிடுகிறார் என்று தற்போது சரியான தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கு தான் 1994-ம் ஆண்டில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
இது அதிமுகவின் கோட்டை. இங்கு பெரும்பாலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அடுத்து கோலார் தங்க வயல்... அங்கு ஏ பார்ம், பி பார்ம் சற்று தாமதம் ஆனாலும் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அங்கேயும் இரட்டை இலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு இடத்தில் தான் டெக்னிக்கல் மிஸ்டேக் காரணமாக தள்ளுபடி ஆகிவிட்டது.
சில ஆவணங்களில் கையெழுத்துக்களை சரியாக போடாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது உண்மை. இரண்டு தொகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை முடிந்ததால் இனி ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. குமாருக்கும் ஆனந்தராஜாவுக்குக்கும் இரட்டைஇலை கிடைக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. மூன்று வேட்பு மனுக்களும் நிராகரிப்பு என சொன்னவர்கள் வேதனை அடைய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications