கார்த்தி சிதம்பரம் vs மாணிக்கம் தாகூர்... தமிழக காங்கிரஸின் புதிய அதிகார மையங்கள்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய அதிகார மையங்களாக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் உருவெடுத்துள்ளனர்.
இவர்கள் இருவருமே தங்களுக்கான ஆதரவாளர்கள் வட்டத்தை தமிழகம் தழுவிய அளவில் பெருக்கிக் கொண்டு வருகின்றனர்.
ஒரு காலத்தில் தமிழக காங்கிரஸில் வாசனா, சிதம்பரமா என்ற நிலை இருந்தது போல் வருங்காலத்தில் மாணிக்கம்தாகூரா, கார்த்திசிதம்பரமா என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஹை அலார்ட்.. லடாக்கில் சீனா உருவாக்கிய புதிய "ஹாட்ஸ்பாட்".. மொத்தமாக படைகளை களமிறக்கிய இந்தியா!
பல கோஷ்டிகள்
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கோஷ்டிப் பூசல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், போன்றோருக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு கணிசமான எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், ஹாரூன் ரஷீத், என பலரும் தனித் தனி அணிகளாக தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இயங்கிவருகின்றனர்.
நிவாரண உதவி
இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் தழுவிய அளவில் நிவாரண உதவிகளை வழங்க கார்த்தி சிதம்பரம் திட்டமிட்ட நிலையில் அதற்கு மூத்த நிர்வாகிகள் பலரும் கே.எஸ்.அழகிரியிடம் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர். தலைவர் நீங்கள் இருக்கும் போது கார்த்தி ஏன் இதில் ஆர்வம் காட்டுகிறார் எனவும் கேட்டிருக்கின்றனர். வழக்கம்போல் விசாரிக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன் என்ற பதிலை கூறிவிட்டு இந்த விவகாரத்தில் எதுவும் கேட்க முடியாமல் தவித்து வருகிறார் கே.எஸ்.அழகிரி.
அதிகாரப் போட்டி
இதனிடையே ராகுல்காந்தியின் நெருக்கமான வட்டத்தில் இருக்கும் மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு மெல்ல டஃப் கொடுக்கத் தொடங்கியுள்ளார். விருதுநகர் தொகுதி எம்.பியான இவருக்கு தென் மண்டலம் மட்டுமல்லாமல் மத்திய மண்டலத்திலும் ஆதரவாளர்கள் வட்டம் உருவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் வடக்கு மண்டலத்திலும் மாணிக்கம் தாகூர் செல்வாக்கு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி தலைமை
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தங்களுக்கான கோட்டாவில் இவ்வளவு சீட்கள் வேண்டும் என இப்போதே கே.எஸ்.அழகிரியிடம் அப்ளிகேஷன் போட்டு வருகின்றனர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள். இதனிடையே சட்டமன்றத் தேர்தல் விவகாரத்தை பொறுத்தவரை தன் கையில் எதுவும் இல்லை, டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படி தான் நடக்கும் என நெருங்கியவர்களிடம் கூறி வருகிறார் கே.எஸ்.அழகிரி.