ஒடிசா ரயில் விபத்தால்.. தள்ளிப்போகும் கருணாநிதி நூற்றாண்டு விழா? வெளியான புது தகவல்
சென்னை: ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெற இருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தில் வியாழக்கிழமை மாலை மிக மோசமான விபத்து அரங்கேறியது. சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா புறநகரான ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போலக் கிளம்பியது. 12841 எண் கொண்ட இந்த ரயில் பாலசோர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.

பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சில பெட்டிகள் எதிரே உள்ள தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது எதிரே யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயிலும் அதில் மோதியுள்ளது. யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் 3 முதல் 5 பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டு மட்டுமின்றி அருகே லூப் டிராகில் இருந்த மற்றொரு சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மேலும், ரயில்வே அமைச்சர் தொடங்கிப் பல அமைச்சர்கள் அங்கே விரைந்துள்ளனர். இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அருகே உள்ளவர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் சென்னைக்கு வந்தது என்பதால் இதில் அதிகப்படியான தமிழர்கள் பணித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.. இதற்கிடையே மீட்புப் பணிகளைப் பார்வையிடப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான குழு ஒடிசா விரைந்திருந்தது.
இதற்கிடையே சனிக்கிழமை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாள். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தது. இதற்கிடையே இப்போது இந்த விபத்து அரங்கேறியுள்ள நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசும் ஆலோசித்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாகவே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மட்டுமின்றி, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் ஒடிசாவுக்கு சனிக்கிழமை செல்கிறார். இதனால் கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications