Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கருணாநிதி அவதூறு பாடல்".. பின்னணியில் இருப்பது சாதிவெறி தான்.. சீமானை விளாசிய கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான மறைந்த கருணாநிதி பற்றி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மற்றும் சீமான் ஆகியோர் அவதூறு பாடல் பாடிய நிலையில் அதனை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு இந்த பாடலுக்குபின்னணியில் இருப்பது சாதிவெறி தான் என அவர் கடுமையாக விளாசியுள்ளார்.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சனம் செய்யும் வகையில் ஒரு பாடல் பாடினார். இதுதொடர்பான புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் ரிலீசாகி உள்ளார்.

இதற்கிடையே சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு கருணாநிதி பற்றிய அவதூறான பாடலை சீமானும் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடியதோடு, ‛‛முடிந்தால் என்னை கைது செய்யுங்க பார்க்கலாம்'' என்று தமிழக அரசுக்கு சவால் விட்டார்.

karunanidhi-defamation-song-puthiya-tamilagam-president-krishnasamy-slams-seeman-and-sattai-duraimu

இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறு பாடல் பாடிய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், ஒருங்கிணைப்பாளர் சீமானை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சீமான் மற்றும் சாட்டை துரை முருகனின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளார். கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கலைஞர் கருணாநிதியை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவே புனயைப்பட்டதாக கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது அநாகரிக்கத்தின் உச்சக்கட்டம்; முழுக்க முழுக்க அடாவடி சாதிய மனப்பான்மையோடு எழுப்பப்பட்ட முழக்கம் அது.

இதுபோன்று பயன்படுத்தப்படும் சொல்லாடர்களுக்கு பல்வேறு விதமான மோசமான எதிர் கருத்துகளும், விமர்சனங்களும் தொடர் சங்கிலியாக மாறும். மொழியை பயன்படுத்தி கொண்டு இளைஞர்கள் மத்தியில் சாதிய ஆணவ மேலதிக்க உணர்வுகளுக்கு தூபமிடுவதும், அதை வளர்த்தெடுப்பதுமே கொள்கை - கோட்பாடு, பண்பாடாக கொண்ட இளைஞர் சமுதாயம் ஒன்று உருவாவது தமிழ் சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.

கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பெயரில் மேடை நாகரிகங்கள் அறவே இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும்; சமூகத்தை சீரழித்து வரும் சமூக வலைதளங்கள் எனும் நவீன தளங்களை பயன்படுத்தி , நாகரிகம் அடைய வேண்டிய ஒரு சமுதாயத்தை பின்னோக்கி தள்ளும் சிலரின் தீய எண்ணங்களும் மேலும் தளைத்திட அனுமதிக்க கூடாது. தற்போது நடைபெறுவது சட்டசபை இடைத்தேர்தல்; இன்று முதல்வராக இருக்க கூடியவர் முக ஸ்டாலின். கருணாநிதி காலமாகி ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கும்,இடைத்தேர்தலுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. தனது 44வது வயதில் 1969ம் ஆண்டில் தமிழகத்தில் முதலமைச்சாராக முதல் முறையாக பதியற்றவர்.அதற்கு பிறகு ஐந்து முறை முதலமைச்சர் பதவியிலிருந்திருக்கிறார்.

அவருடைய கொள்கைகள் அல்லது செயல்பாடுகளோடு நூற்றுக்கு நூறு எல்லோருக்கும் உடன்பாடு இருந்திருக்காது. தேர்தல் காலங்களில் கூட்டணிக்காக பல கட்சிகள் அவரிடம் நெருங்குவார்கள்; பின் விலகுவார்கள். இது அவருக்கு மட்டுமே உரித்தானது அல்ல. 1967ல் அண்ணா தலைமையில் ஏழு கட்சி கூட்டணி உருவாகி, தேர்தல் முடிந்த பின் கூட்டணியில் அங்கம் பெற்ற பல கட்சிகள் எதிர்நிலை எடுத்தன. 1967இல் யாரை வீழ்த்தினார்களோ, நான்காண்டு கழித்து 1971இல் அவர்களுடனே கூட்டணி சேரும் நிலை உருவாகிற்று. தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இதேபோன்ற அசரியல் நிலைப்பாடு தான் நிலவுகிறது.

கொள்கை, கோட்பாடு, செயல்பாடுகளில் அவரோடு முரண்பட்டு கொண்டே பயணித்தவர்களும் உண்டு; எதிர்த்து வெளியேறியவர்களும் உண்டு. அவருடைய எல்லா கருத்துகளிலும், எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் உடன்படவும் முடியாது; முரண்படவும் முடியாது. அவருடன் ஒத்துப்போகக்கூடிய கொள்கை, கோட்பாடுகளும் உண்டு; சிறிதும் ஒத்துப்போக முடியாத பல்வேறு அசம்ங்களும் உண்டு. ஜனநாயகத்தில் இதுவே எதார்த்தமாக இருக்கிறது.

அவர் பல அபார தனித்திறமைகள் கொண்ட அபூர்வ அரசியல்வாதி, கண்மூடி கண் திறப்பதற்குள் பலரையும் ஒன்றும் சேர்ப்பார்; பிரிக்கவும் செய்வார். இது அவரிடம் இருந்த பலரை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் தனித்திறமை ஆகும். அவரோடு பழகுகின்ற காலத்தில் ஒரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு ஒத்துப்போவார்; இன்னொரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு எதிர்நிலை எடுப்பார். இந்த திறமைகளால் தான், அற்ப சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஒரு சமுதாயத்தில் அதுவும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் தமிழகத்தில் அவரால் அரசியல் செய்ய முடிந்தது; ஆட்சியில் இருக்க முடிந்தது.

நமக்கு மாணவ பருவத்திலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு தருணங்கள் உண்டு. அவரோடு பயணித்த காலங்கள் இனிமையானவதாகவும் இருந்திருக்கிறது; மிக மிக கசப்பானதாகவும் இருந்திருக்கிறது. சமூக, அரசியல் சூழலை கணக்கில் கொண்டு நெருங்கியும் இருந்திருப்போம்; வெகுதூரம் விலகியும் சென்றிருப்போம். சட்டசபைக்கு உள்ளேயே ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து மோதல்கள் கூட நடைபெற்றது உண்டு. ஜனநாயகத்தில் பொதுவாழ்வில் இந்த இரண்டுமே சம கூறானவை. இரண்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிக்குமே்பாது அல்லது ஒன்றின் தலைமையில் இன்னொன்று செயல்படுகின்ற பொழுது ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும் பிரிய நேரிடுகின்ற பொழுது கருத்தியல் ரீதியாக தாக்கி கொள்வதும் உலக அளவிலும் உண்டு; இந்தியாவில் அதிக அளவிலும் உண்டு. அதிலும் தமிழகத்தில் மிக மிக அதிக அளவில் உண்டு.

கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பிட்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் அரசியல் மேடைகளை அரைமணிநேரம் கூட நின்று பார்க்க முடியாது. கேளிக்கைபடுத்துவது என்ற பெயரில் ஆபாசமும் அருவருப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கும். இடைப்பட்ட காலத்தில் அவைகளுக்கு விடை கொடுக்கப்பட்டன. 1996க்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டு காலம் ஓரளவிற்கு மேடைப்பேச்சுக்கள், விமர்சனங்கள் நாகரீகமாகவே அமைந்தன. அண்மைக்காலமாக இன்றைய ஆளுங்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் மேடைகள் பொது இலக்கணங்களிலிருந்து விலகி, தமிழ் சமுதாயத்தை மீண்டும் ஒரு தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கான முன்னுதாரணங்களை அரங்கேற்றி வருகின்றன. பல நேரங்களில் ஆளுங்கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வழக்கறிஞர்களாக இருக்கக்கூடியவர்கள் கூட சாதி ரீதியான சமூகங்களை குறிப்பிட்டு ஒப்பிடக்கூடிய போக்குகள் அதிகரித்து வந்துள்ளன. மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் வரம்பு மீறி பேசிய உதாரணங்களும் உண்டு. ஆனால் அவையெல்லாம் அவ்வப்போது உயர் பொறுப்பில் இருக்கூடியவர்களால் கண்டிக்கப்பட்டு இருந்தால் தமிழகத்தில் என்றே ஒருநாள் ஒரு நாகரிகமாக சூழ்நிலைகள் உருவாகி இருக்கும்.

அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பல பேருடைய பேச்சுக்கள் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க கூடியதாகவும், ஆத்திரமூட்டக்கூடியதாகவும் பெரும் கலவரங்களையே உருவாக்க கூடியதாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக யூடியூப், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற தொழில்நுட்பங்கள் மிக மிக மோசமானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டன. பல்வேறு முகவரிகளிலும் தங்களது முகங்களை வெளிப்படுத்தாமல் அநாகரிகமாக கருத்துகளை உமிழும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.

இன்னும் பலபேர் ரூபாய் 200க்கும், 300க்கும் கூலிக்காக கூட சில அமைப்புகள் அரசியல் கட்சிகளின் ஏவல்களாக செயல்படுகின்றனர். சமூக வலைளங்கள் இப்பொழுது இருபக்கமும் கூர்மையடைந்த ஆயுதம் போல் ஆகிவிட்டது. தங்களுடைய முகங்களையும், முகவரிகளையும் மறைத்து கொண்டு சாதிய, மத ரீதியான வன்மத்தோடு கருத்துகளை பதிவிடுதவதை ‛கருத்துரிமை' என்ற பெயரில் காலச்சாரமாக்க முற்படுகிறார்கள்; அவர்களே ஒரு இயக்கமாகவும் திரளுகிறார்கள். அவர்களுக்கோ இந்த மண்ணுக்கோ மொழிக்கோ எவ்வித உண்மையான பந்தமும் பற்றும் கிடையாது. இதுபோன்ற தான் தோற்றித்தனமாக ‛கருத்து சுதந்திரம்' என்ற பெயரில் தமிழ் கலச்சாரத்தை கெடுக்க கூடியவர்களுடைய நடவடிக்கைகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய சூழல் வந்துவிட்டது.

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நல்லதும் நடக்கிருக்கிறது; மேசமான சம்பவங்களும் நடந்து இருக்கிறது;. அவருடைய பங்களிப்பு தமிழுக்கோ, தமிழ் சமுதாயத்திற்கோ எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆட்சியாளராக இருந்தபோது அவருடய அரசியல் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. அதேபோன்று அவருடயை ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு சாதகமாக நடவடிக்கைகளையும் குறிப்பிட்டால் மட்டுமே அவருடன் ஆட்சிக்கால குறைபாடுகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உண்டான அருகதையும் தகுதியும் பெற முடியும்.

தேர்தலாக இருந்தாலும், அரசியல் பிரச்சனைகளாக இருந்தாலும், மக்களுடயை பிரச்சனைகளாக இருந்தாலும் எண்ணிய சில மணி நேரங்களிலேயே அல்லது ஓரிரு நாட்களிலேயே அதுகுறித்து அவரிடம் சென்று பேசுவதற்கு உண்டான ஆளுமை அவரிடத்திலேயே இருந்தது. அதுதான் ஜாதி வெறியும், மதவெறியும் இனவெறியும் ஒவ்வொருவரது அணுவிலேயும் ஊறிப்போய் இருக்ககூடிய தமிழகத்தில் ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் இருந்திருக்கிறார்; 60 ஆண்டு காலம் அரசியலில் நிலைத்திருந்திருக்கிறார்.

அவருடய தவறான அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்தற்கு எத்தனையோ தளங்கள் உண்டு. எத்தனையோ காரணிகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அவர் மறைந்த ஆறேழு வருடங்களுக்கு பிறகும், எப்பொழுதோ யாராலோ எதற்காகவே புனையப்பட்ட அவதூறு பாடலை சம்பந்தமில்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரை கொச்சைப்படுத்தி வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பாடி காண்பிப்பதும், அதற்காக ஒருவர் மீது சட்ட நவடிக்கைகள் பாயும் பொழுது, அதை நாகரீகமாக சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு பதிலாக, ‛‛அதே வர்த்தையை திரும்ப சொல்லி முடிந்தா நடவடிக்கை எடுத்து பார்'' என்று சொல்வதெல்லாம் அரசியலாக தெரியவில்லை. சாதிய ஆவணத்தின் இன்னொரு வடிவாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

ஒருவர் மறைந்து விட்டால் அவரை விமர்சனம் செய்யககூடாதே என்ற கேள்வியோ, அதற்காக அனுதாபமோ காட்ட வேண்டும் என்பதில்லை. அதேசமயம் பாடிக் காட்டியவர்களின் மனோ நிலை; அந்த பாடல் வரிகளின் பொருள்; பாடியவர்களின் தொனி; அதை ஆதரித்தவர்களின் தொனி என அனைத்தும் சாதாரண மனிதர்களின் தொனியாக தெரியவில்லை; அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. கண்டிக்க மனமுடையோர் கண்டிக்கலாம்; கடந்த செல்லக்கூடியவர்கள் கடந்து செல்லலாம்; ஆனால் நியாயப்படுத்த மட்டும் முயல்வது , நியாயமாகாது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+