கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.. சகோதரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மு.க.முத்து. 77 வயதான மு.க.முத்துவின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக மோசமாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் மு.க.முத்து காலமானார் என்பதை அவரது மனைவி சிவகாம சுந்தரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர் மு.க.முத்து. அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில், பிள்ளையோ பிள்ளை படத்தை மு.க.முத்துவின் தந்தை கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான படமாகும். திரைத் துறையில் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவர் திரைத் துறையில் இருந்து விலகினார்.

எம்ஜிஆர் போலவே உடை, நடை, பாவனைகளோடு நடித்தவர் மு.க.முத்து. இதனால், அடுத்த எம்ஜிஆராக மு.க.முத்து என்று பலராலும் பேசப்பட்டார். ஆனால், படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்காததால் திரைத் துறையை விட்டு விலகினார். தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகத் தனித்து வசித்து வந்தார். அரசியல் பணிகளிலும் விருப்பம் இல்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.
மு.க.முத்துவுக்கு சிவகாம சுந்தரி என்ற மனைவியும், அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். மு.க.முத்து வறுமையில் சிரமப்பட்டபோது அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து தனது நிலை குறித்து கூறிய நிலையில், ஜெயலலிதா அவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக மு.க.முத்து உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னையில் மு.க.முத்து வசித்து வந்த நிலையில் ஒருமுறை உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மு.க.முத்து இன்று காலை 8 மணியளவில் காலமானதாக அவரின் மனைவி சிவகாம சுந்தரி தெரிவித்திருக்கிறார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் மு.க.முத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மு.க.முத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று மலர்வளையம் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பரசன் பலரும் அஞ்சலி செலுத்தினர். மு.க.முத்து மறைவையொட்டி, திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்துவின் உடல் கோபாலபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications