கருணாநிதியின் நினைவு தின பேரணி.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்.. நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பாக இன்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் 1000 கணக்கில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Recommended Video
2018 ஆகஸ்ட் 7ம் தேதி காவிரி மருத்துவமனையில் காலமான இவரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவாரூரில் கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க அவரின் சிலைக்கும், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. சென்னையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியும் அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.
5 முறை முதல்வர்.. இந்திய அரசியலுக்கே முன்னோடி.. முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் இன்று!
திமுக திட்டம்
இதையடுத்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாகவே செய்யப்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகே பேரணி தொடங்கியது. திமுக சார்பாக நடத்தப்படும் இந்த பேரணி காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது.
பேரணி
பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பேரணிக்காக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றி. பேரறிஞர் அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே நிரந்தர ஓய்வு கொள்ளும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திற்கு அவரது முதலாமாண்டு நினைவு நாளில் உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
ஸ்டாலின் அழைப்பு
அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கொரோனா கால நடைமுறைகள் காரணமாக நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமலே போய்விட்டது. தி.மு.கழகத்தை ஆட்சியில் அமரவைத்து, 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ்நாட்டை உதயசூரியனால் விடியச் செய்து, அத்தகைய வெற்றியையும் சாதனைகளையும் பேரணியாகச் சென்று முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வாய்ப்பு அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளில் அமையவிருக்கிறது.
எங்கு நடக்கும்?
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையிலிருந்து தொடங்கி, பேரறிஞர் அண்ணா துயிலுமிடம் அருகே தலைவர் கலைஞர் ஓய்வெடுக்கும் நினைவிடம் வரை ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. தலைநகர் சென்னையில் மட்டும்தானா அமைதிப் பேரணி? தமிழ்நாடு முழுவதும் எத்திசையிலும் புகழ் மணக்கும் தலைவரன்றோ முத்தமிழறிஞர் கலைஞர்! அதனால், உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரோட்டமான திருவுருவச் சிலை அமைந்துள்ள ஊர்களில் கழகத்தினர் மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம்.
தமிழ்நாடு முழுக்க ஏற்பாடு
நினைவேந்தல் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் படங்களும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியில் நிறைந்திடும் வண்ணம் கிளைகள் தோறும் புகழ் வணக்கம் செலுத்தப்பட வேண்டும். அந்தப் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்திடும் வகையில் கழக ஆட்சியின் திட்டங்கள் அமைந்திடும். தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும் - மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும். கடல் அலை போல எழும் "வாழ்க வாழ்க வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே" என்ற முழக்கம், வானம் அதிரும் வகையில் ஒலிக்கட்டும்!, என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.