கருணாநிதி பிறந்தநாள் ஜூன் 3 இனி அரசு விழா... சட்டசபையில் அதிரடியாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மறைந்த மு.க கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1924 ஜூன் 3 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர்; தாயார் அஞ்சுகம். கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்றவர் கருணாநிதி.
எதிர்ப்பெனும் நெருப்பாற்றில் தொடக்கம் முதல் இறுதிவரை நீந்திக்கொண்டே இருந்தவர்தான் கருணாநிதி.
5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

தீயை தாண்டியிருக்கிறேன்
"பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று பராசக்தி படத்தில் வசனம் எழுதியிருப்பார் கருணாநிதி. இது வெறும் திரை வசனம் மட்டுமல்ல, தனது சொந்த வாழ்வின் அனுபவ வரிகளை வசனமாக எழுதி பேச வைத்திருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்
தனது 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டமாக எழுதத் தொடங்கியவர் கருணாநிதி. அன்று தொடங்கிய அவரது போராட்டப் பயணம், இடஒதுக்கீட்டு போராட்டம், அவசரகால பிரகடனத்திற்கு எதிரான போராட்டம், மொழிப் போராட்டம் என கடைசி வரை போராளியாக வாழ்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி வயது மூப்பினால் மறைந்தார்.

சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு
அவரது பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, கைம்பெண் மறுமண நிதி, உதவி மகளிர் சுய உதவி குழுக்கள், பெரியார் சமத்துவபுரம் திட்டம் தந்தவர் கருணாநிதி.

திட்டங்கள் என்னென்ன
மகளிருக்கும் சொத்துகளில் உரிமை, உழவர்களுக்கு இலவச மின்சாரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. வி.பி சிங் குஜ்ரால் வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர்களால் பாராட்டப்பட்டவர் கருணாநிதி.

அனைத்திலும் வென்றவர்
60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற கருணாநிதி தமிழ்நாட்டை ஐந்துமுறை ஆண்டவர். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத கலைஞரின் மறைவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன என்றார்.

கருணாநிதி பிறந்தநாள் ஜூன் 3 அரசு விழா
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்றும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications