பாஜகவுடன் கூட்டணி அமைத்த போதும், "மதவெறியை மாய்ப்போம்" என முழங்கிய திராவிட பேரியக்க நாயகன் கருணாநிதி
சென்னை: இந்தியாவில் மதவாத சக்திகளுக்கு எதிராக தீரமுடன் போராடக் கூடிய ஒரு தலைவராக வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசியல் சூழ்நிலைகளில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நேரிட்ட போதும் மதவெறியை மாய்ப்போம் என சங்கநாதமாக முழங்கியவர் கருணாநிதி.
கடவுள் மறுப்பு, நாத்திகம், பகுத்தறிவு, தமிழின விடுதலை என இந்திய அரசியலில் தனித்துவமான திராவிடர் இயக்கத்தால் வார்க்கப்பட்டு வாக்கு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. ஓட்டு அரசியல் களத்தில் நின்றபோதும் மதவாத எதிர்ப்பு, மாநிலங்களின் உரிமை, தமிழர் நலன் ஆகியவற்றில் சமரசமில்லாத போராளியாக களமாடியவர் கருணாநிதி.
இந்திய அரசியலில் திராவிடர் இயக்க பேரொளியாய் சுடர்வீசிய கருணாநிதி 1999-ம் ஆண்டு எடுத்த ஒற்றை முடிவு ஒட்டுமொத்த தேசத்தையே அதிர வைத்தது. மதவாத கட்சியாக முத்திரை குத்தப்பட்ட பாஜகவுடன் கூட்டணியே அமைத்தார் கருணாநிதி. அதுதான் அத்தனை ஆதரவாளர்களையும் ஒரு கணம் திகைத்தவைத்தது. அத்தனை எதிராளிகளையும் அப்படியே திக்கு முக்காடவும் வைத்தது. அதற்கு முன்னர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, பாஜக வெளியில் இருந்து அவரது அரசுக்கு ஆதரவு தந்தது. அந்த அரசியல் திமுகவும் அங்கம் வகித்தது.

வரலாறு படைத்த கருணாநிதி
ஆனால் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு என இந்துத்துவா கொள்கைகளில் இரும்பைப் போல உறுதி காட்டிக் கொண்டிருந்த பாஜகவுடன் வெளிப்படையாகவே நேரடியாக கூட்டணி அமைத்தார் கருணாநிதி. திமுகவின் ஒட்டுமொத்த கொள்கைகளையும் பாஜகவிடம் அடகு வைக்கிறாரா கருணாநிதி என்றெல்லாம் கேள்விகள், கேலிகள், விமர்சனங்கள் ஏராளமாக முற்றுகையிட்டு மொத்துக் கொண்டிருந்தன. அப்போது பாஜகவின் பிரதான அஜெண்டாவாக இருந்தது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்பது. திமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த போது, அந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையை எடுக்கமாட்டோம் என வாக்குறுதி தந்தது. ஆம் இந்திய அரசியலில் மாநில கட்சி ஒன்றுக்கு மத்தியில் செல்வாக்கான கட்சி ஒன்று கொள்கையை விட்டு கொடுப்பதாக வாக்குறுதி தர வைத்த வரலாற்றை எழுதியவர் கருணாநிதி.

பாஜகவுடனான கூட்டணி ஏன்?
மேலும் பா.ஜ.க. கட்சி யோடு 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, மத்திய ஆட்சியிலும் அங்கம் வகித்து, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் படாதபாடுபடுத்தி, கடைசியில் ஆதரவையும் விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்திருக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருகின்ற நிலையே ஏற்பட்டிருக்காது. பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்து, அவர்களை நிராதரவாக விட்டுவிட்ட நிலையில் மனிதாபிமான எண்ணத் தோடு, அதே நேரத்தில் சிறுபான்மைச் சமூகத்தின ருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தோடுதான் தி.மு.க. அந்த அணியோடு கூட்டுச்சேர நேரிட்டது ஒரு தெளிவான அரசியல் விளக்கமும் கொடுத்தார் கருணாநிதி.

கொள்கையில் இறுதி
பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டதற்காக தமது வழமையான 'திராவிடர் இயக்க புத்தி'யை கருணாநிதி ஒருபோதும் தூர்பிடிக்கவிட்டதும் இல்லை. அந்த கால கட்டத்திலும் ராமன் ஒரு புராண படைப்பு; கடவுளே அல்ல என தர்க்கம் செய்தார் கருணாநிதி. இன்னும் ஒருபடிமேலே போய்,
ஜெயலலிதாவின் ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானதல்ல; அதனால் மதவாதம் இனிமையானது என்று பொருள் அல்ல. பாம்பை விட மோசம் என்று ஒரு பெண்ணையோ ஆணையோ சொன்னால், பாம்பு நல்லது என்று அர்த்தமா? பாம்புக்கும் விஷம் உண்டு என்றுதான் அர்த்தம். தி.மு.கழகம் என்றைக்கும் சிறுபான்மைச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரணாகத்தான் இருக்கும், மதவெறியை மாய்ப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, அது எங்கள் குருதியோட்டத்தோடு கலந்த ஒன்று. வாஜ்பாய்க்கு ஆதரவு அளித்தாலும்.. பா.ஜ.க.வின் கொள்கையில் நாங்கள் சமரசமாகி அந்த அடிப்படையில் இந்த முடிவை எடுக்கவில்லை. தி.மு. கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் அப்படியே இருக்கின்றன. அவற்றை அப்படியே சிந்தாமல், சிதறாமல் காப்பாற்றக்கூடிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு என்றைக்கும் உறுதியாக உண்டு. அதே நேரத்தில், இந்தியாவினுடைய அரசியலில், ஜனநாயகத்தில், எங்களுக்கு ஒரு உறுதியான நிலை இருக்க வேண்டுமென்ற கோட்பாடும் உண்டு என நெற்றிப் பொட்டில் அடித்தார் போல பிரகடனமாக வெளியிட்டவர் கருணாநிதி.
Recommended Video

கருணாநிதி பாதை
பாஜகவுடனான திமுகவின் கூட்டணி என்பது ஒரு அரசியல் நிலைப்பாடுதான்; கொள்கைவழி சமரசமே இல்லை என்பது திமுகவின் நிலைப்பாடாக இருந்தது. தமது கட்சியினரிடையேயும் இந்த கொள்கை நிலைப்பாட்டை ஆழப் பதியச் செய்திருந்தார் கருணாநிதி. சிறுபான்மை மக்களின் நிரந்தரமான பாதுகாப்பு அரணாக எப்போதும் திமுக இருக்கும் என்பதில் ஒருதுளியும் சமரசம் செய்யாதவராக திகழ்ந்தவர் கருணாநிதி. அத்தகைய சித்தாந்த நிலைப்பாட்டால் இன்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, கருணாநிதி பாதையில் மதவாதத்தை, மதவெறியை, இந்துத்துவா வெறியாட்டத்தை மூர்க்கமாக எதிர்க்கும் முன்னணி தலைமைப் பாத்திரத்தை ஏற்று நிற்கிறது என்பது மிகை அல்ல.












Click it and Unblock the Notifications