1924 முதல்.. 2018 வரை..மு.கருணாநிதி முதல்.. மு.க ஆனது வரை..
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் மட்டும் அல்ல; இந்திய அரசியலில் முக்கியமான தலைவராக வலம் வந்தவர் மு.கருணாநிதி. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே அரசியல் களத்தில் நுழைந்தவர். திராவிட இயக்கத் தலைவர்களில் முன்னோடி அவர். அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான திருப்பங்களை ஆண்டுவாரியாக வரிசைப்படுத்தித் தந்துள்ளோம். இந்தப் பட்டியல் ஒரு சிறுதுளிதான்.
1924 : அன்றைக்குச் சென்னை மாகாணமாக இருந்த நாகப்பட்டினம் அருகே அமைந்திருந்த திருக்குவளை என்ற ஊரில் முத்து வேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் 03.06.1924 அன்று மகனாகப் பிறந்தார் மு.கருணாநிதி.

1938 : அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கினார். அதை எதிர்த்து திருவாரூரில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த உ.கருணாநிதி 'வாருங்கள் எல்லோரும் இந்திப் போருக்கு' என அழைத்துவிடுத்தார். இந்திக்கு எதிரான போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
1941 : மாணவர் மன்றம் என்கிற அமைப்பைத் துவங்கி அதன் தலைவராகச் செயல்பட்டார். அந்த மன்றமே திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்கிற சிறப்பை பெற்றது.
1942 : மு.கருணாநிதி தன் உயிரினும் மேலாகக் கருதிய அறிஞர் அண்ணாவை முதல்முதலாக 1942இல் தான் சந்தித்தார்.

1942 : 'முரசொலி' முதலில் துண்டுப் பிரசுரமாகத் தொடங்கினார். பின்னர் 10.08.1942 அன்று முதல் அது மாத இதழாக வெளியானது.
1944 : 28.05.1944 அன்று பேபி டாக்கீஸ் என அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான 'சாந்தா (அல்லது) பழனியப்பன் ' நாடகத்தை அரங்கேற்றினார்.
1945 : பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாட்டில் பெரியாரைச் சந்தித்தார் மு.கருணாநிதி. அவர் தனது 'குடியரசு' வார இதழில் பணியாற்ற அழைத்தார். அதில் 1945ஆம் ஆண்டு முதல் துணை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். மொத்தம் 11 மாதங்கள் இதில் வேலை செய்தார்.

1946 : திரைத்துறையில் 'ராஜகுமாரி' படத்தில் மூலம் முதன்முதலாகத் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார் மு.கருணாநிதி. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர் முதன்முதலாகக் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது பெயர் எம்.ஜி. ராம்சந்தர் என அறிமுகப்படுத்தப்பட்டது.
1949 : சென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவில் அடாத மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாதுரை தொடங்கினார். திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக மு.கருணாநிதி நியமிக்கப்பட்டார்.
1951 : ஒரு பக்கம் திரைப்படத்துறையில் பணி. இன்னொரு பக்கம் கட்சி பணி. இவற்றுக்கு இடையே 'மாலை மணி' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் மு.கருணாநிதி.

1952 : மு.கருணாநிதியின் கதைவசனத்தில் தமிழ்த்திரை உலகைப் புரட்டிப்போட்ட 'பராசக்தி' வெளியானது. பகுத்தறிவு அலை வீசிய இந்தப் படம் பலத்தை வரவேற்பைப் பெற்றது. அதில் கதாநாயகனாகச் சிவாஜி கணேசன் அறிமுகமானார்.
1953 : 04.01.1953 அன்று நெசவாளர்களின் துயர் துடைக்க வேண்டித் தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளை, தனது தோளில் சுமந்து சென்று சென்னையில் வீதி வீதியாக விற்றார் மு.கருணாநிதி.
வட நாட்டுத் தொழில் அதிபரின் பெயரில் அழைக்கப்பட்டு வந்த டால்மியாபுரம் என்ற ஊரின் பெயரை அழகான தமிழில் கல்லக்குடி என்று மாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தினார். ஆகவே கைது செய்யப்பட்ட கருணாநிதி , 6 மாத கால சிறையில் அடைக்கப்பட்டார்.

1954 : இந்த ஆண்டில் இவரது கைவண்ணத்தில் 'மனோகரா' , 'மலைக்கள்ளன்', 'அம்மையப்பன்' ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாகின. மூன்றும் சூப்பர் டூப்பர் ஹிட். 'மலைக்கள்ளன்' குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது.
1956 : இவரது 'ராஜா ராணி', 'ரங்கூன் ராதா' ஆகிய இரு படங்கள் திரை ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகின.
1957 : 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்தார். 04.05.1957 அன்று தனது முதல் சட்டமன்ற உரையில் நங்கவரம் விவசாயிகளின் போராட்டம் பற்றிப் பேசினார்.

இதே ஆண்டு இவரது 'புதையல்', 'புதுமைப்பித்தன்' ஆகிய 2 படங்கள் திரையில் வெளியாகின.
1960 : 25.09.1960 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராகத் தலைமைக் கழகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே ஆண்டில் 'குறவஞ்சி', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஆகிய படங்கள் வெளியாகின.
1961 : 'தாயில்லா பிள்ளை', 'இருவர் உள்ளம்' என 2 படங்கள் கருணாநிதியின் பங்களிப்பில் வெளியாகின.
1962 : 1962 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார்.

1963 : 1963 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பற்றி எரிந்துகொண்டிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது, தமிழ் மொழியைக் காத்திட திமுகவின் தலைமைக் கழகத்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு தலைவராகக் கருணாநிதி நியமிக்கப்பட்டார்.
1964 : 1964 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தல் பணிக்குழு தலைவராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. தேர்தலில் கட்சி வெற்றிகண்டதற்குக் கருணாநிதியைப் பாராட்டி அண்ணாதுரை மோதிரம் பரிசளித்தார். அதை அவர் மறையும் அவரை அணிந்திருந்தார்.
15.06.1964 அன்று தி.மு. கழகப் பொருளாளராகக் கருணாநிதி இருந்தபோதுதான் சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞரணி அலுவலகமான 'அன்பகம்' திறக்கப்பட்டது.
1965 : 16.02.1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டார்.

1966 : 18.09.1966 அன்று தன்னுடைய 'காகிதப்பூ' எனும் நாடகத்தை அரங்கேற்றினார் கருணாநிதி.
1967 : 1967 டிசம்பர் 29, 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற தி.மு.க. 4வது மாநில மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாதுரையிடம் ரூ.11 இலட்சத்தைத் தேர்தல் நிதியாக வழங்கி வைத்தார். அதனை அடுத்து இவர் சைதாப்பேட்டை தொகுதியில் நிற்கவைக்கப்பட்டார். வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அண்ணாதுரை அனைத்து வேட்பாளர் பெயரையும் உச்சரித்தார்.
ஆனால், சைதாப்பேட்டை வேட்பாளர் பெயரைச் சொல்லும் போது கொஞ்சம் நேரம் அமைதி காத்தார். அதன்பின் 'சைதாப்பேட்டை 11 லட்சம்' என்றார் அண்ணாதுரை. தொண்டர்கள் கை வலிக்கும் வரை கரகோஷம் எழுப்பினர்.
1969 : இந்த ஆண்டுதான் தமிழ்நாடு மாபெரும் இழப்பைச் சந்தித்தது. 03.02.1969 அன்று திமுகவின் தலைவர் அண்ணாதுரை மறைந்தார். அவரது மறைவையொட்டி மு.கருணாநிதி இதயத்தை இரவலாகத் தாருங்கள் அண்ணா என்று ஒரு கவிதை எழுதினார். அது தமிழ்நாட்டின் பேசுபொருளானது. அண்ணாதுரையின் மறைவுக்குக் கூடிய கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.
அண்ணாதுரையின் மறைவைத் தொடர்ந்து 09.02.1969 அன்று சட்டமன்றக் கட்சித் தலைவராக திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு கருணாநிதி தேர்வு செய்யப்பட்டு, 10.02.1969 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். மேலும் 7.07.1969 அன்று தி.மு கழகத்தின் 4-வது பொதுக்குழுவில் கருணாநிதி முதன்முறையாகக் கழகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1971 : 15.03.1971 சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தமிழக முதல்வராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்றார் மு.கருணாநிதி.
1973 : 24.12.1973 அன்று பெரியார் மறைந்தார். சட்டத்தில் இடமில்லை என்ற போதும் அரசின் அறிவிக்கையாக வெளியிட்டு, பெரியாரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி.
1974 : இந்த ஆண்டில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஒரு காரியத்தைச் செய்தார் கருணாநிதி. 1974 சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று கோட்டைக் கொத்தளத்தில் மாநில முதல் அமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தந்தார். அது இன்றுவரை இவரது சாதனைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

1977 : 1977 சட்டமன்ற தேர்தலில் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.
1979 : 1979 தமிழை மத்திய ஆட்சி மொழியில் இணைக்கக்கோரிக் கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார். தனது கட்சித் தொண்டர்களின் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற சொன்னார்.
1981 : 15.09.1981 அன்று ஈழத் தமிழர் நலனுக்காக நடந்த போராட்டம் நடத்தினார். அதன்பொருட்டு கருணாநிதி கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய மாநில அரசு.
1983 : 1983 ஆ,ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் கருணாநிதி.
1986 : 1986 இந்தி மொழி திணிப்பை எதிர்த்துப் போராடினார். அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவை எரித்ததால் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனையும் பெற்றார்.
1987 : 15.09.1987 அன்று திமுக தலைமை அலுவலகமாக விளங்கிவரும் அண்ணா அறிவாலயத்தைத் திறந்து வைத்தார்.

1989 : 27.01.1989 அன்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று 3-வது முறையாகத் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
முதல்வராக இருந்த கருணாநிதி 28.03.1989 அன்று மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். தனது ஆட்சிக்காலமான 06.05.1989 அன்று ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை தரும் சட்டத்தை நிறைவேற்றினார்.
1990 : 25.05.1990 அன்று தனது தென்பாண்டிச் சிங்கம் புத்தகத்திற்காகத் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தின் 'மாமன்னன் இராஜராஜன் விருதை' அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம் இருந்து பெற்றார். மேலும் தங்கப் பேனா ஒன்றைப் பரிசாக அளித்தார் சர்மா. முத்தமிழறிஞர் எனப் பட்டத்தையும் வழங்கினார்.
07.08.1990 அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி நிறைவேற்றிய தீர்மானத்தின்படி மண்டல் கமிஷன்அறிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1991 : 30.01.1991 அன்று ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அறிக்கை அளிக்க மறுத்தும் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனைப் பயன்படுத்தி, சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு கருணாநிதி அரசைக் கலைத்தது.
1996 : 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக பலத்துடன் ஆட்சியை அமைத்தது. துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி 4-வது முறையாக முதலமைச்சர் ஆனார்.
1997 : ஊரும் பட்டியலின மக்கள் வாழும் பகுதியும் பிரிந்து கிடப்பதை ஒழிக்க வேண்டும் என்ற பெரியார் கண்ட கனவை நனவாக்கும் பொருட்டு 'சமத்துவபுரம்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்.
2000 : 1.1.2000 அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்குச் சிலை நிறுவினார் கருணாநிதி. 4.7.2000 அன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் அடித்தளம் அமைத்துத் தரும் முயற்சியாக தரமணியில் "டைடல் பார்க்" திறந்துவைத்தார்.

2001 : 30.7.2001 அன்று ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே போராட்டத்தில் இறங்கினர். அன்றே விடுதலையானார்.
2004 : 4.5.2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தியுடன் கருணாநிதி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமரானார். அமைச்சரவை திமுக பங்கேற்றது.
2005 : 2.7.2005 அன்று "சேது சமுத்திரத் திட்டம்" தொடங்கப்பட்டது.
2006 : 13.5. 2006 சட்டமன்றத் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. கருணாநிதி தனது சொந்த மண்ணான திருவாரூரில் வென்று 5ஆவது முறையாக முதலமைச்சரானார்.
2007 : 11,12.5.2007 அரை நூற்றாண்டு காலம் அரசியல் களத்தில் பணியாற்றியதற்காக "சட்ட மன்றப் பணியில் கலைஞர் பொன்விழா!" கொண்டாடப்பட்டது. மேலும் 13.9.2007 அன்று சிறுபான்மையினர் நலன் காக்க வேண்டி முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு அவசரச் சட்டம் இயற்றினார்.
7.11.2007 அன்று ரூபாய் 9757 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது. கருணாநிதியின் அறிவுரைப்படி 10.6.2009 அன்று துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

2009 : 11.2.2009 அன்று கருணாநிதிக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. 26.2.2009 அன்று அருந்ததி இன மக்களுக்குக் கல்வியில், வேலை வாய்ப்பில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றினார் கருணாநிதி.
இதே ஆண்டு 23.7.2009 அன்று கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2010 : கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தைச் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்களால் 13.3.2010 அன்று திறக்கப்பட்டது. சென்னையில் 15.9.2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் இவரது ஆட்சியில் திறக்கப்பட்டது.
2011 : திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு 13.5.2011 அன்று அமோக வெற்றி பெற்றார் கருணாநிதி.

2016 : 19.5.2016 திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகளைப் பெற்று கருணாநிதி 13வது முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்ற புகழுக்கு உரியவர் ஆனார்.
1.12.2016 அன்று உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23.12.2016 அன்று உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.
2018 : கருணாநிதியின் உடல் நலத்தில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 29.7.2018 அன்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 7.8.2018 மாலை 6.10 மணி அளவில் தனது வரலாற்றை முடித்துக் கொண்டார் கருணாநிதி.
-
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications