எல்லா பள்ளி, கல்லூரிகளிலும் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு பாடத்திட்டம்.. அமைச்சர் பொன்முடி தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறது திமுக அரசு. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'சமூக நீதிக்காவலர்- கலைஞர்' என்ற தலைப்பில் அமைச்சர் பொன்முடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "சமூகநீதிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் குறித்து சமூகம், அரசியல் ரீதியாகவும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில், இந்த சமூக நீதிக்குழுவை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரை சட்டம், சமூக ரீதியாக சமூக நீதிக்கு போராடியது சாதாரணமானதல்ல. அவரைப்பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துச்சொல்வது குறித்து பல்வேறு கருத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு பாடத்திட்டமாக இணைக்கப்படும். இதற்கான பாடப் புத்தகங்கள் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். கல்லூரிகள், பள்ளிகளில் இது தொடர்பான கட்டுரை, கவிதைப் போட்டிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த முடிவெடுத்துள்ளோம்.
சமூக நீதி தத்துவத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பெண்ணுரிமை, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை அனைத்தையும் இணைத்து இளைஞர்களுக்கு அதைத் தெரிவிக்கவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு வால்மார்ட் நிறுவனம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், உயர் கல்வித்துறை என முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications