தொற்று வியாதிகிட்ட வீர வசனம் ஏன்?.. சிம்புவுக்கு கொரோனா வந்தா தெரியும்.. கருணாஸ் விமர்சனம்
சென்னை: தியேட்டர்களில் 50 சதவீதம் அனுமதி கொடுத்தாலே போதுமானது என நடிகரும் திருவாடாணை எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படமும் சிம்புவின் ஈஸ்வரன் படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க விஜய்யும் சிம்புவும் கோரிக்கை விடுத்தார்கள்.
இதையடுத்து 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது. இதற்கு மருத்துவர்கள், அரசியல் கட்சியினர் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
டிஜிபி
இந்த நிலையில் தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் இன்று காலை தமிழக காவல் துறை டிஜிபியை சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தார்.
அறிவிப்பு
அவர் அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் எங்களது நீண்ட கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் இனம் என ஜெயலலிதாவின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மறுபரிசீலனை
இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதியை வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு பட்ட கஷ்டம் வீணாகி விடக் கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி தந்தால் நல்லது.
வெல்வோம்
கொரோனாவை வெல்வோம், கொல்வோம் என தொற்று நோயிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது? சிம்பு அது போல் பேசியிருக்கக் கூடாது. அது தவறு. தொற்று நோயை போய் வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி? அவருக்கு கொரோனா வந்தா தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன் என்றார் கருணாஸ்.