கைவிடப்பட்ட கருணாஸ்.. ஸ்டாலினுக்கு திடீர் வாழ்த்து.. முக்குலத்தோர் முழக்கத்தையும் கையில் எடுத்தார்!
முக ஸ்டாலினுக்கு கருணாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: அன்னைக்கு முக ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பிறகு கொஞ்ச நேரத்தில் அந்த ஆதரவை வாபஸ் வாங்கி கொண்டாரே நடிகர் கருணாஸ், அவர் இப்போது ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.
திருச்சி மாவட்டத்திற்கு நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் வந்திருந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:
அடிமட்டத்திலிருந்து உழைத்து உழைத்து உயர்ந்து ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.
கோவை குறித்த விமர்சனங்கள்.. வீண் அவதூறு வேண்டாம்.. திமுகவின் கார்த்திகேய சிவசேனாதிபதி விளக்கம்
வாழ்த்து
சிறந்த நிர்வாகத் திறமையுள்ள ஸ்டாலின் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்பார் என நம்புகிறேன். எடப்பாடி அரசு கடுமையாகக் கடன் சுமையோடு தமிழகத்தை விட்டுச் சென்றுள்ளது. அதையெல்லாம் ஸ்டாலின் மீட்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தைப் புறக்கணித்துக் குறிப்பிட்ட சில சமூகங்களை மட்டும் ஒருங்கிணைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது.
அநாதை
முக்குலத்தோர் சமூகத்தை அரசியல் அநாதையாக்க நினைத்தார்கள் அதன் காரணமாக இன்று தோல்வியைச் சந்தித்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பி திமுகவிற்கு வாக்களித்துள்ளனர்" என்று தெரிவித்தார். ஸ்டாலினுக்கு கருணாஸ் சொல்லி உள்ள இந்த வாழ்த்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சசிகலா
சசிகலாவின் தீவிரமான ஆதரவாளராகவே கருணாஸ் பார்க்கப்பட்டு வருகிறார்.. சசிகலா அரசியல் விலகல் என்ற அறிக்கை வந்ததுமே, அதிர்ந்துபோன கருணாஸ் அமைப்பு திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.. அதிமுக கூட்டணியிலிருந்து வந்து, திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு தெரிவிக்கவும், அது தமிழக களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது..
யூகம்
ஒருவேளை திமுக, கருணாஸுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்குமா அல்லது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பிரச்சாரத்துக்கு கருணாஸை திமுக பயன்படுத்தி கொள்ளுமா என்றெல்லாம் யூகங்கள் பறந்தன. இதற்கு காரணம் அந்த சமயத்தில் கருணாஸ் பேட்டி தந்திருந்தார்.. அதில், அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் புறந்தள்ளிவிட்டார்கள்... சீட்டு கேட்கும் அளவுக்கு மானம்கெட்டுப் போகவில்லை... அதிமுக தோல்விக்கு வேலை செய்வோம்'' என்று கூறியிருந்தார். அதனால்தான், திமுகவில் கருணாஸ் என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வம் அன்று ஏற்பட்டது.
காரணம்
ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் திமுகவுக்கு தந்த ஆதரவை கருணாஸ் திரும்பப் பெற்றுள்ளார்... கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்காததால் அவர் ஆதரவை வாபஸ் பெற்றதாக காரணம் சொல்லப்பட்டது.
கட்சி
ஆக, அதிமுகவும் இவரை கண்டு கொள்ளவில்லை.. திமுகவும் இவரை கண்டுகொள்ளவில்லை.. இதனால், எந்த கட்சியும் இல்லாமல் தனித்துவிடப்பட்டார் கருணாஸ்.. இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. அத்துடன், முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக புறக்கணித்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.
திருநீறு
எடப்பாடியார் மீது மட்டுமல்ல, இதே ஸ்டாலினையும் பலமுறை காட்டமாக விமர்சித்தவர்தான் கருணாஸ்.. "திருநீறை உதாசீனப்படுத்தி முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்திவிட்டார்... அதற்கு உடனடியாக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றுகூட கடந்த காலங்களில் விமர்சித்தவர்தான்.. இந்த சமயத்தில், கருணாஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.