இருவர் கைதுக்குப் பின்னர் கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல்...தொடர் விசாரணை!!
சென்னை: சென்னையில் தி. நகரில் இருக்கும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சீல் வைத்தனர். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை அவமானப்படுத்தி, இந்துக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தி இருப்பதாக அந்த சேனல் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சேனல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த வீடியோவை யூ டியூபில் இருந்து கறுப்பர் கூட்டம் நீக்கியது. ஆனால், இதுவரை மன்னிப்பு கோரவில்லை. இதைக் கண்டித்து இந்து அமைப்புக்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இழிவாக பேசி இருக்கும் யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழிவுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கின் கீழ் இதுவரை செந்தில் வாசன் என்பவரை சென்னை வேளச்சேரியில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நேற்று இந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 30 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை தி நகர், கண்ணம்மாபேட்டையில் இருக்கும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அங்கு சில ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். அலுவலகத்தை வாடகைக்கு விட்ட நபரிடமும் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications