4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை: கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி ஆகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (மார்ச் 15) முதல் அமலுக்கு வந்துள்ள தேர்தல் விதிகளின்படி, முறைகேடுகளை கண்காணிக்க 24 அமலாக்க முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் பணியாளர்களைப் பயன்படுத்தக்கூடாது. பொது மைதானங்கள் மற்றும் ஹெலிபேட்கள் போன்ற வசதிகளை ஆளுங்கட்சி மட்டுமே ஏகபோகமாகப் பயன்படுத்தக்கூடாது. மற்ற கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அரசுப் பணிகளில் தற்காலிக நியமனங்களைச் செய்யக்கூடாது. மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அன்றாடப் பணிகளை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவனிக்கலாம், ஆனால் அது தேர்தலை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, விருதுநகர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் எஸ்.பிக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கரூர் மாவட்ட எஸ்பியாக டி.என். ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்.பியாக டி.வி. கிரண் ஸ்ருதி, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பியாக சுஜித் குமார், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக என். ஸ்ரீநாதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் நடந்துள்ள இந்த மாற்றம் கவனிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு மாவட்டத்தில் நீண்ட காலம் பணியாற்றிய அதிகாரிகள் அல்லது தேர்தல் பணியில் நடுநிலையை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. புதிய எஸ்.பி.க்கள் பொறுப்பேற்றவுடன் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள 24 மணி நேரப் பறக்கும் படைகளின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவார்கள்.












Click it and Unblock the Notifications