விஜய்யின் நீண்ட தாமதம், மீறப்பட்ட ரூல்ஸ்.. தவெக பிரச்சார கூட்ட நெரிசல்! 5 முக்கிய பாயிண்டுகள்
கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று சனிக்கிழமை கரூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். அப்போது கரூரில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது. விஜய்யை பார்க்க அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டதால் அங்குத் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் துயரத்தில் 35+க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் நடந்த 5 முக்கிய பாயிண்டுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
தவெக தலைவர் விஜய் சட்டசபைத் தேர்தலுக்காக ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் தான் போலீசார் அனுமதி கொடுத்து வருகிறார்கள். இருப்பினும், விஜய்யை பார்க்க வரும் ரசிகர்கள் அந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் இருக்கவே செய்கிறது.

இதற்கிடையே நேற்று விஜய் கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர். இவர்களில் எட்டுக் குழந்தைகளும் அடங்குவர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த அரசியல் கூட்டத்தில் வேறு எங்கும் இந்தளவுக்கு மோசமான சம்பவம் நடந்தது இல்லை. இது தொடர்பான வீடியோ பார்த்தாலே நெஞ்சு உலுக்குவதாக இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து 5 முக்கிய பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
5 பாயிண்டுகள்
1. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், சனிக்கிழமை நண்பகலில் கரூரில் பிரச்சாரத்திற்கு வந்திருக்க வேண்டும். போலீசாரும் கூட மதியம் பிரச்சாரம் செய்யவே அனுமதி அளித்திருந்தனர். இருப்பினும், அவரது வருகை ஆறு மணி நேரம் தாமதமானது. மதியம் வருவதாகச் சொன்ன விஜய் இரவு தான் கரூருக்கு வந்தார்.
2. தாமதம் ஆனதால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. இரவு விஜய் வந்த போது நேரத்தில், கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியிருந்தது. மதியம் முதலே மக்கள் காத்திருந்ததால் பலர் மயக்கமடைய ஆரம்பித்தனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் அங்குத் தள்ளுமுள்ளு ஏற்பட ஆரம்பித்தது.
தண்ணீர் பாட்டில்
3. பொதுமக்கள் மயங்கியதைக் கவனித்த விஜய், தனது உரையை நிறுத்திவிட்டு, தான் வந்திருந்த பிரத்தியேகப் பிரச்சாரப் பேருந்திலிருந்து தண்ணீர் பாட்டில்களைக் கூட்டத்தை நோக்கி வீசத் தொடங்கினார்.
4. அப்போது, விஜய்யின் பேருந்து அருகே செல்ல முயன்ற ரசிகர்களும், ஆதரவாளர்களும் செல்ல முயன்றனர். அப்போது பலரும் தவறி விழுந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ்
5. பொதுமக்கள் காயமடைந்த தகவல் கிடைத்தவுடனேயே ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இருப்பினும், நெரிசல் காரணமாக, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்குள் செல்ல சிரமப்பட்டன. அளவுக்கு அதிகமாகக் கூட்டம் இருந்தால் ஆம்புலன்ஸ் கூட விரைந்து சென்று மக்களை மீட்டு வர முடியவில்லை.
இரங்கல்
இந்தப் பேரழிவு சம்பவத்திற்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும், இருவரும் கரூருக்கு நேரடியாகவும் செல்கிறார்கள். இது தவிரப் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடு முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications