‘41 பேரை சாவடிச்சுட்டு டிராமா பண்றீங்களா’.. தவெக நிர்வாகிகளை கேள்வியால் துளைத்த தபெதிக நிர்வாகி
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக மற்றும் விஜய் செயல்பாடு கடுமையான விமர்சனமானது. தற்போது அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சென்னையில் தவெகவினர் அன்னதானம் வழங்கி கொண்டிருந்த நிகழ்ச்சியில், தபெதிக நிர்வாகி ஒருவர் 41 மக்களை சாவடிச்சுட்டு சாப்பாடா போடறீங்க என்று ஆவேசமாக வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து களம் காண வியூகங்களை வகுத்து வருகிறார்கள். விஜய் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்றும் அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதிமுக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் சம்பவம்
இந்நிலையில் கரூர் சம்பவத்தின் தாக்கம் தமிழ்நாடு அரசியலில் ஓயவில்லை. விஜய் கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பிரச்சாரம் சென்றபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் ஆறாத ரணமாக உள்ளது. இது தமிழ்நாடு அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுவரை அதுகுறித்தான விவாதங்கள் ஓயவில்லை.
சென்னை திருமுள்ளைவாயில் பகுதியில், தவெக சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தனர். விலையில்லா விருந்தகம் என்கிற பெயரில் சாலையோரத்தில் நிழற்குடை அமைத்து தவெக நிர்வாகிகள் மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தனர். அங்கு சில மக்களும் வரிசையில் நின்று உணவு வாங்கிக் கொண்டிருந்தனர்.
தவெக - தபெதிக வாக்குவாதம்
அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் நாகராஜ் என்பவர் அங்கு சென்றுள்ளார். தவெக நிர்வாகிகளின் செயல்பாட்டை பார்த்து ஆத்திரமடைந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தவெக நிர்வாகிகள் வைத்திருந்த பேனர்களை தூக்கி வீசிய நாகராஜ், "41 பேரை சாவடிச்சு சோறு போடறீங்களா. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரனா." என்று கோபமாக கேட்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகளும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அவர்களிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் நிலை வந்தது. இது தப்பு தல. உணவு கொடுப்பதை தடுக்காதீங்க. பெண் நிர்வாகிகளிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அங்கிருப்போர் நாகராஜிடம் கேள்வி எழுப்பினார்கள். உடனடியாக அருகில் இருந்த போக்குவரத்து போலீஸ் அங்கு விரைந்தார்.
பரபரப்பு
அவர் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து, நாகராஜனை அங்கிருந்து மீட்டு சென்றார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பொது இடத்தில் தங்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறி நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications