கரூர் துயரம்.. விஜய்யின் மனதை வெகுவாக பாதித்துள்ளது.. நீலாங்கரை வீட்டின் முன் தவெக வழக்கறிஞர் பேட்டி
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் விளக்கம் அளிப்பார் என்று அக்கட்சியின் வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் விஜய் மனதை அதிகமாக பாதித்துள்ளதாக கூறிய அவர், காவல்துறை விதித்த நிபந்தனைகள் ஒன்றை கூட தவெக மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் அவசர அவசரமாக சென்னை திரும்பி இருக்கிறார். கரூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருச்சிக்கு விரைவாக வந்த விஜய், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

இதன்பின் தனி விமானம் மூலமாக சென்னை வந்த விஜய், வீட்டிற்கு சென்றபின் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டார். இந்த சம்பவம் நடந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பின் விஜய் இரங்கல் தெரிவித்தது விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக வழக்கறிஞர் அறிவழகன் விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக தலைவர் விஜய் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார். கரூரில் ஏற்பட்ட குளறுபடியால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு துணையாக தவெக நிற்கும்.
இந்த கோரமான சம்பவம் விஜய்யின் மனதை அதிகமாக பாதித்துள்ளது. தற்போது வழக்கறிஞர் அணி சார்பாக நாங்கள் கூடியுள்ளோம். இந்த துயரத்தில் இருந்து விஜய் மீண்டு வர வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நானே பேச முடியாத நிலையில் உள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் என்றும் துணையாக இருப்பார்.
அடுத்தக்கட்ட பிரச்சாரம் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஒரு சம்பவம் நடந்தது என்றால், உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படும். காவல்துறை கொடுத்த நிபந்தனைகளை தவெக முறையாக பின்பற்றி இருக்கிறது. திருச்சி, அரியலூர், நாகை என்று எந்த இடத்திலும் தவெக மீறவில்லை. மக்களை சரியான முறையில் விஜய் சந்தித்துவிட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications