விஜய் பிரச்சாரத்தின் போது அடிக்கடி ஆம்புலன்ஸ்கள் வந்தது ஏன்? தமிழக அரசு கொடுத்த விளக்கம்!
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ்கள் வந்தது ஏன் என்பது தொடர்பாக ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மற்றும் சுகாதாரத்துறை செயலர் செந்தில் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். தவெக கட்சியினரே 7 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்திருந்ததாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தது தமிழ்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கூட்ட நெரிசலுக்கு ஆம்புலன்ஸ்கள் வந்ததே காரணம் என்று ஒரு தரப்பு பேசி வந்தது.

அதேபோல் போலீசார் முறையாக பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், தவெக பிரச்சாரத்திற்கு அளிக்கப்பட்ட இடம் போதுமானதல்ல என்றும், கேட்ட இடத்தை கொடுத்திருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என்றும் தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஊடக வீடியோக்கள் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறை செயலர் அமுதா ஐஏஎஸ், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சுகாதாரத்துறை செயலர் செந்தில் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். இதில் விஜய் பிரச்சாரத்தின் போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 108 ஆம்புலன்ஸ் சேவைகள் கரூரில் 19 வாகனங்கள் இருக்கின்றன. கூட்டம் நடந்த இடத்தில் மட்டும் 6 வாகனங்கள் இருந்தன.
முதலில் இரவு 7.14 மணிக்கு 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு வர, 7.20 மணிக்கு முதல்முறையாக சென்றது. அடுத்த அழைப்பு 7.15 மணிக்கு வந்த நிலையில், 2ஆம் முறையாக 7.23 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றது. அரசு ஆம்புலன்ஸ்கள் 6, கட்சித் தலைவர் வாகனம் பின் 2 ஆம்புலன்ஸ்கள், அதுபோக 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. கட்சியினரின் ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்ததால், அது உடனே கொண்டு வரப்பட்டது.
இரவு 7.45 மணி முதல் 9.45 மணி வரை அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கரூர் பிரச்சார கூட்டத்திற்கு தவெக கட்சியினர் 5 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்திருந்தனர். சிலர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்து கூட்டத்திற்குள் முதலில் வந்தது தவெக ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் தான்.
முதலில் போலீஸ் மூலமாகவே தகவல் கிடைத்தது. தொலைப்பேசி சரியாக வேலை செய்யாததால், வயர்லெஸ் மூலமாக தகவல் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பலரும் தண்ணீர் இல்லாமல் தவித்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் தவெகவினர் முன் வைத்து வரும் ஆம்புலன்ஸ் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications