“எம்ஜிஆர் எப்படி கூட்ட நெரிசலை கையாள்வார் தெரியுமா?” விஜய்க்கு சுட்டிக்காட்டிய சங்கத்தமிழன்
சென்னை: எம்ஜிஆர் பங்கேற்ற கூட்டத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டபோது அவர் கூட்டத்தை கையாண்ட வழிமுறையை விஜய்க்கு சுட்டிக்காட்டி உள்ளார் விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன். கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் கோரச் சம்பவம் நடந்திருக்கும் நிலையில், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே கரூரில் இருந்து திருச்சி வந்த விஜய், உடனடியாக தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார்.

விஜய் கூட்டம்
விஜய் தனது வீட்டிற்கு சென்ற பின், கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் பதிவை வெளியிட்டார். விஜய்யின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
எம்ஜிஆர் கூட்டத்தை கையாண்டது எப்படி?
சங்கத்தமிழன் பேசுகையில், "எம்ஜிஆரை பற்றி பேசுகிறார் விஜய். எம்ஜிஆர் கூட்டத்தை எப்படி கையாள்வார் தெரியுமா? எம்ஜிஆர் பேசும் கூட்டத்தில் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அவர் பேசி முடித்துவிட்டு, நான் ஒரு முக்கியமான கருத்தை ஆண்களுக்கு மட்டும் சொல்லப்போகிறேன், பெண்கள் அதை காது கொடுத்துக் கேட்கக்கூடாது, கூட்டத்தை விட்டு பெண்களும் குழந்தைகளும் போய்விடுங்கள் எனக் கூறினார். பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கூட்டத்தை விட்டுப் போன பிறகு, கூட்டம் முடிந்துவிட்டது, இப்போது எல்லோரும் போகலாம் எனக் கூறியுள்ளார்.
அங்கிருந்த தொண்டர்கள், நீங்கள் ஏதோ சொல்வதாக சொல்லிவிட்டு இப்போது போகச் சொல்கிறீர்களே எனக் கேட்டுள்ளனர். அதற்கு எம்ஜிஆர், இந்தக் கூட்டம் ஒரே நேரத்தில் கலைந்தால் கூட்டத்தில் நசுக்கி இருப்பீர்கள், அசம்பாவிதம் நடந்துவிடும். அதனால் தான் அவர்களை முன்கூட்டியே அனுப்பினேன் எனக் கூறினாராம்.
விஜய்க்கு நிர்வாகத் திறன் இல்லை
காவல்துறை திமுக அரசின் காவல்துறை. கூட்டணியில் இருக்கும் நாங்கள் மாநாடு நடத்தினாலே அவ்வளவு நெருக்கடி கொடுப்பார்கள். கூட்டம் நிறைய கூடக்கூடாது என்று போலீசார் நிறைய நெருக்கடி கொடுப்பார்கள். கூட்டணிக் கட்சிக்கே அப்படி என்றால் எதிர்க்கட்சி என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அந்த எச்சரிக்கை உணர்வு ஏன் வரவில்லை? சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி விஜய்க்கு முடிவெடுக்கத் தெரியவில்லை. நிர்வாகத்திறமை இல்லை.
உங்களை நம்பி வந்தவர்களை காப்பாற்றவே நிர்வாகத் திறமை இல்லை. நீங்கள் எப்படி தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போகிறீர்கள்? பழியைப் பூராம் ஆளுங்கட்சி மீது தூக்கிப் போட்டுவிட்டு, சினிமா டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட மனிதனை மையமாக வைத்து உருவாகும் சினிமா ஹீரோவால் வழிநடத்தப்படும் சமூகம் இப்படித்தான் இருக்கும்.
விஜய் கூட்டத்துக்கு பச்சிளம் குழந்தைகளை தூக்கிச் சென்ற, குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்களுக்கு நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்த வாரத்துக்குள் விஜய்யை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மீண்டும் இன்னொரு தவறைச் செய்துவிட்டு இன்னொருவர் மீது பழி போடுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications