காத்தடித்த காசிமேடு.. வஞ்சிரம், வவ்வாலுக்கு இப்படி ஒரு நிலைமையா! புரட்டி போட்ட புரட்டாசி
சென்னை: புரட்டாசி மாதம் தொடங்கியதாலும், மகாளய அமாவாசை காரணமாகவும் இன்று காசிமேட்டில் பெரிய அளவுக்கு மீன்கள் விற்பனை ஆகவில்லை. வழக்கமாக அதிக விலைக்கு விற்கப்படும் வஞ்சிரம், வவ்வால் மீன்கள் இன்று குறைவான அளவே விற்பனையாகியுள்ளன.
சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள் அப்படியே சில்லறை விற்பனையாளர்களுக்கு அங்கேயே ஏலம் விடப்படுவதால், சில்லறை விற்பனையாளர்கள் மக்களுக்கு குறைந்த விலையில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

வழக்கமாக வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, கடம்பா, பாறை, நெத்திலி, சீலா, வெள்ளை வவ்வால், கானாங்கெளுத்தி, இறால், கெண்டை, சங்கரா உள்ளிட் மீன்கள் பெரிய அளவுக்கு இங்கே விற்பனைக்கு வரும். வஞ்சிரம்தான் எப்போதும் விலையில் டாப். கிலோ ரூ.1,200 தொடங்கி மீன்களின் தரத்திற்கு ஏற்ப விலை கூடுதலாக இருக்கும். எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகாலை 4 மணி முதல் நிற்க இடம் இன்றி காசிமேட்டில் கூட்டம் குவிந்து கிடக்கும். ஆனால் இன்று பெரிய அளவுக்கு கூட்டம் இல்லாமல் இருக்கிறது.
இன்று புரட்டாசி மாதம் என்பதாலும் மகாளய அமாவாசை என்பதாலும் மீன்களின் விற்பனை பெரிய அளவுக்கு இல்லை. மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவுக்கு ஆர்வம் காட்டாததால் விலை சரிந்திருக்கிறது. அதாவது வஞ்சிரம் ரூ. 1,200 லிருந்து ரூ.800 ஆகவும், வவ்வால் ரூ.800ல் இருந்து ரூ.600 ஆகவும், கடம்பா ரூ.500 லிருந்து ரூ.350 ஆகவும் குறைந்திருக்கிறது. விலையை குறைத்து விற்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் விற்பனையாகவில்லை என்று விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
இன்று மகாளய அமாவாசை என்பதால் இறந்தவர்களுக்கு மக்கள் திதி கொடுத்து வருகின்றனர். எனவே மீன் வாங்க வருபவர்களை விட, திதி கொடுக்க வருபவர்கள் கூட்டம் தான் கடற்கரையில் அதிகமாக இருக்கிறது. மகாளய அமாவாசையில் அசைவம் உண்ண மாட்டார்கள் என்பதாலும், புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பது பலரின் மத வழக்கமாக இருப்பதாலும் காசிமேட்டில் மீன் விற்பனை குறைந்திருக்கிறது. வழக்கத்தை கண்டுக்கொள்ளாமல், சத்தான உணவை சாப்பிட விரும்புவோர்கள் வழக்கம் போல காசிமேட்டில் குவிந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications