"சர்வதேச மகளிர் துணிவு விருது.." கவுசல்யா சங்கருக்கு அமெரிக்க தூதரகம் கவுரவம்
சென்னை: சென்னையில் செயல்பட்டுவரும் அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்த "தைரியமான பெண்கள் நாளைய உலகுக்கு வழிகாட்டுவார்கள்" என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் கலந்துகொண்டு சாதி ஒழிப்புப் போராளியும், மனித உரிமை பாதுகாப்பு ஆர்வலருமான கவுசல்யா சங்கரை கவுரவித்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் "சர்வதேச மகளிர் துணிவு" விருதுக்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கௌசல்யா சங்கர்.
குடும்பம், சமூகம், மற்றும் தேசம் என பல்வேறு தளங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் வீரத்தையும், மனோதரியத்தையும், தலைமை பண்புகளையும் வெளிப்படுத்தும் பெண்களை கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கம். தி ஹிந்து குழுமத் தலைவர் டாக்டர். மாலினி பார்த்தசாரதி, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளர் டாக்டர். வி. சுரேஷ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துணிவுமிக்க பெண்மணிகள் குறித்து உரையாற்றினார்கள்.

சாதிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் நோக்கத்துடன் மறைந்த தன் கணவரது பெயரில் "சங்கர் சமூக நீதி அறக்கட்டளை"யை 2017ஆம் ஆண்டு கௌசல்யா சங்கர் நிறுவினார். இந்த அறக்கட்டளை சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உதவுவதுடன், சமூக பாகுபாடுகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாடுபட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய கௌசல்யா, "பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராட நான் முடிவெடுத்த கணமே எனக்கு சிறகுகள் முளைத்துவிட்டன. அவை உயரே, உயரே பறந்து, வானைத் தொட எனக்கு மன வலிமையைக் கொடுத்தன" என்று குறிப்பிட்டார்.
சமூக இடைவெளிக் கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச துணிவுமிக்க பெண்மணிக்கான பரிந்துரை சான்றிதழை, கௌசல்யா சங்கருக்கு வழங்கிய அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் பேசுகையில், " அமெரிக்கா, தனது வெளியுறவுக் கொள்கையில் ஆண்-பெண் பேதமின்மை, அனைவரும் உள்ளார்ந்த சமூகம், சர்வதேச அளவில் மகளிரின் அந்தஸ்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. சமூக, பொருளாதார, அரசியல் என அனைத்து வகையிலும் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சர்வதேச வளர்ச்சி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சாதிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் அமெரிக்க அரசு கொண்டாடும் "மகளிர் வரலாற்று மாதம்" என்ற நிகழ்வில், சமூகத்தில் தமது பங்களிப்பின் மூலமாக தடம் பதித்த பெண்களை அமெரிக்க அதிபர் கௌரவிப்பது வழக்கம். இவ்வாண்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் சோதனையான இந்தக் காலகட்டத்தில், தடுப்பூசி ஆராய்ச்சியாளர்கள் முதல் முன் களப் பணியாளர்கள் வரை ஏராளமான பெண்கள் வழிநடத்திச் செல்கிறார்கள். இரவு, பகல் பாராமல் கோவிட்19 தொற்றினை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள், குறிப்பாக ஆப்ரிக்க இனப் பெண்கள், ஆசிரியர்கள், வணிக நிறுவனத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், குழந்தைகள் பராமரிப்பாளர்கள் என பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையான பெண்கள்தான் இன்று நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். 232 வருட அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்மணி அமெரிக்க துணை ஜனாதிபதியாகி சரித்திரம் படைத்திருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிதான் கவுசல்யா என்பது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு: அமெரிக்க அரசாங்கம் 2007ஆம் ஆண்டு முதல், உலகின் 75 நாடுகளைச் சேர்ந்த 155 பெண்களை துணிவுமிக்க பெண்மணிகளாகத் தேர்ந்தெடுத்து கௌவரவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கிவரும் அமெரிக்க தூதரகங்கள் தலா ஒரு துணிவுமிக்க பெண்மணியை பரிந்துரைக்க, அவர்களிலிருந்து ஒரு பெண்மணி மூத்த அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவிக்கப்படுகிறார். இந்த ஆண்டின் IWOC விருது பெறுநர்களைப் பற்றி அறிய: https://www.state.gov/2021-international-women-of-courage-award-recipients-announced/












Click it and Unblock the Notifications