செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி எப்போது? காவேரி மருத்துவமனை டாக்டர்கள் எடுத்த முக்கிய முடிவு!
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்ற செந்தில்பாலாஜியின் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். விசாரணையை அந்த மருத்துவமனையிலேயே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைகள் பெற்று வருகிறார். எனவே அங்கேயே வைத்து சர்ஜரி செய்வது தான் சரியாக இருக்கும் என செந்தில் பாலாஜி மனைவி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டார். ஜூன் 15ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகிறது.
இவர்கள் விரைவாக பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மேலும் பல பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சைக்கு உடல்நிலை தயாராக இருக்கிறதா என உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவுகளுக்கு ஏற்ப அறுவை சிகிச்சை எப்போது செய்யப்படும் என்பது தீர்மானிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், அமலாக்க துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு வருகிற புதன்கிழமை (ஜூன் 21) பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு, இதயத்திற்குச் செல்லக்கூடிய 3 ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications