பதற வைக்கும் டிரோன் காட்சி! கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தின் தற்போதைய நிலை என்ன?
சென்னை: சென்னைக்கு அருகே கவரப்பேட்டையில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதிய விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. உருக்குலைந்த ரயில் பெட்டிகள் துண்டு துண்டாக சிதறிக் கிடக்கும் பதற வைக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கிளம்பி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்ல வேண்டிய அந்த ரயில் நேற்று இரவு 8.27 மணிக்கு கவரப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தின் காரணமாக 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீசார், ஆர்.பி,எஃப் போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்றாலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். மோப்ப நாய்களை கொண்டு தடம்புரண்ட ரயில்களில் யாரேனும் சிக்கி இருக்கிறார்கள் என தேடுதல் பணி நடைபெற்றது. விபத்து ஏற்பட்ட இடத்தில் ரயில் பாதை மோசமாக சேதமடைந்துள்ளது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளன. அதனை கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
#WATCH | Tamil Nadu: Drone visuals from Chennai-Guddur section between Ponneri- Kavarappettai railway stations (46 km from Chennai) of Chennai Division where Train no. 12578 Mysuru-Darbhanga Express had a rear collision with a goods train, yesterday evening.
— ANI (@ANI) October 12, 2024
12-13 coaches of… pic.twitter.com/QnKmyiSVY7
கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில் பெட்டிகள் தாறுமாறாக சிதறிக் கிடக்கின்றன. மீட்புப் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தின் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தடம் புரண்ட ரயில் பெட்டிகள், தண்டவாளத்தின் குறுக்கும் நெடுக்குமாக சிதறிக் கிடக்கும் காட்சி, காண்பவர்களை பதற வைப்பதாக உள்ளது. ரயில் பெட்டிகள் உருக்குலைந்து போய்க் கிடக்கும் நிலையில், ராட்சத கிரேன்கள், ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இன்று பிற்பகல் வரை மீட்பு பணிகள் நடக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, பெங்களூரில் இருந்து வந்துள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு வல்லுநர் குழுவினர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் விபத்து நடந்த இடத்தில் நேரடி ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மெயின் டிராக்கில் செல்ல வேண்டிய பாக்மதி ரயில் லூப் லைனிற்கு மாறியது எப்படி என வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது.
ரயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் உள்ள பெட்டியை கீழே தள்ளுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்பு பணிகளில் சுமார் 350 பேர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications