கால்மாட்டில் கிழக்கு..ரெளத்திரம் படைத்து ராஜாங்கம் நடத்து..ஸ்டாலினை வாழ்த்திய வைரமுத்து
சென்னை: சுழல்வாள் எடுத்து சூழ்ச்சியை உடைத்து..ரெளத்திரம் படைத்து ராஜாங்கம் நடத்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து வாழ்த்தியுள்ளார். கால்மாட்டில் கிழக்கு உள்ளது கவலை ஏன் உனக்கு என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிறன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்.பி. துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின்
உங்களில் ஒருவனான என்னை திமுக தலைவராக தேர்வு செய்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது அண்ணா அமர்ந்த இடம். கருணாநிதி கோலோச்சிய இடம். நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல. தொண்டர்களால் தான் நான் தலைவராக இங்கு நிற்கிறேன். நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அன்று முதல் நமக்கு ஏறுமுகம் தான்.

2வது முறை தலைவர்
அன்று முதல் வெற்றி செய்தியை தவிர்த்து ஏதுவும் காதுகளுக்கு கேட்டகவில்லை. 2வது முறையும் உங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். இது நீங்கள் எனக்கு இட்டுள்ள கட்டளை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படி தேர்தலை நடத்தி வருகிறோம். பொறுப்புகள் தகுதியானவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. திமுக பழுத்த மரமாக இருப்பதால் தானே கல் எறிகிறார்கள். திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை. வீசப்பட்ட கல்லை வைத்து கோட்டை கட்டுபவர்கள் திமுகவினர்.

இரண்டு பக்கமும் இடி
அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை.

எதிரிகளின் நோக்கம்
இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது. உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நீங்கள் சொன்னத்தை வெட்டி, ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம் என்றும் மு.க ஸ்டாலின் கவலையுடன் பேசினார்.

வைரமுத்து வாழ்த்து
திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். கவிஞர் வைரமுத்து மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க தலைவராய் மீண்டும் மகுடம் பூண்ட
முதலமைச்சரை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துரைத்தேன் என்று கூறியுள்ளார்.

ராஜாங்கம் நடத்து
எருதுபோல் உழைப்பு..ஏழைபோல் உணவு.. திராவிடத் தினவு..தீராத கனவு..கவலை ஏன் உனக்கு?
கால்மாட்டில் கிழக்கு என்றும் வைரமுத்து பதிவிட்டுள்ளார். சுழல்வாள் எடுத்து சூழ்ச்சியை உடைத்து..
ரெளத்திரம் படைத்து..ராஜாங்கம் நடத்து என்றும் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications