கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஜூனில் திறப்பு.. பெயரை சொன்னதுமே அதிர்ந்த சட்டசபை!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். 'கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம்' என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடந்தது. இதில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு 50 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீரமைக்கும் பொருட்டு கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய பேருந்த நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பேருந்து நிலையம் வருகிற ஜூன் மாதத்தில் 'கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம்' என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 6 ஏக்கரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலை ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு நேற்று சட்டசபையில் அறிவித்தார்.
இதேபோல் தற்போது பெங்களூரு சாலையில் திருமழிசை அருகே கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையமும் சர்வதேச தரத்துக்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார்.
சென்னை திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 5 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மேம்படுத்தப்படும் என்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு அங்காடி வளாகம் ரூ.33.35 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
மேலும் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மாதவரம் சரக்குந்து முனையத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கும்.
சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்த பஸ்கள் நிறுத்துமிடம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.கிழக்கு கடற்கரையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை முதற்கட்டமாக சுமார் 5 கி.மீ. நீளத்துக்கு மிதிவண்டிப்பாதை (சைக்கிள்) மற்றும் நடைப்பாதை ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை வில்லிவாக்கம், இரட்டை ஏரி, பாடி மற்றும் வடபழனி ஆகிய 4 மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள இடங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்படும். சிறுசேரியில் அமைந்துள்ள 50 ஏக்கர் வன நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வளம் ஏற்படுத்தப்படும். சென்னை வெளிவட்ட சாலையில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
சென்னை பெருநகர பகுதியில் மனைப்பிரிவுகளுக்கான திட்ட அனுமதி இனி இணைய வழியாகவே வழங்கப்படும். சென்னை பெருநகர பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதற்காக மாற்றத்தக்க வளர்ச்சி உரிமை சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.
இதனிடையே தமிழ்நாடு சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மீதான மானிய கோரிக்கை விவாதமும் நேற்று நடைபெற்றது. இதில் இந்த துறையின் அமைச்சர் சு.முத்துச்சாமி கூறும் போது. சென்னை பெருநகர பகுதியில் இயங்கும் மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் மின்சார ரெயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்து ஆலோசித்து, ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் ஒருங்கிணைந்த கியூஆர் பயணச்சீட்டு முறை மற்றும் பயண திட்டமிடலுக்கான செயலி ரூ.15 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல் கட்டிடங்கள் பெருகுவதை தடுக்கவும், ஒழுங்குபடுத்தவும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் தலைமை அலுவலகத்தில் அதற்கென்று தனி அமலாக்கப்பிரிவு ஒதுக்கப்படும் என்றும் கூறினார். கட்டிட முடிவு சான்று விரைந்து வழங்கவும், பிணைய தொகையை முடிவு சான்று வழங்கும் போதே திருப்பி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications