இன்னும் சில நாட்கள்தான்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது? சேகர்பாபு சொன்ன பதில்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை: வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மாதக்கணக்கில் அல்லாமல், நாட்கணக்கில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய சேகர்பாபு, இதன் திறப்பு விழாவுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூர் பேருந்து வாகனங்களால் நகரம் கடும் நெரிசலில் சிக்கிவிடுகிறது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்டது. இப்போது பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என கூறப்படுகிறது.

சில நாட்களில் பணிகள் நிறைவு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானம் தொடர்பான அனைத்து பணிகளும் வரும் மார்ச் இறுதியில் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது. தற்போது அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், உணவகம் உள்ளிட்ட வசதிகளை செய்யப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.. முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஆய்வு
பேருந்து நிலையத்தின் 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டது. எஞ்சிய சில பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ. அன்பரசன் இன்று நேரில் ஆய்வு செய்தனர். புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

சேகர்பாபு சொல்வது என்ன?
இந்த ஆய்வுக்கு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வர பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க உள்ளோம். மாதங்களில் அல்லாமல் நாட்கள் அடிப்படையில் பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications