கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்.. களம் இறங்கிய பாஜக.. மத்திய அமைச்சர் எல் முருகன் எழுப்பிய சரமாரி கேள்வி
சென்னை: கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல படாதபாடு படுகிறார்கள், பஸ் நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சிலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் குமுறுகிறார்கள். அதேபோல் நேற்று சர்வீஸ் சாலைகளில் பேருந்துகள் இயக்குவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக வண்டலூர் பகுதி மக்கள் நேற்று பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், ஆளும் திமுக அரசு அடிப்படை வசதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வரும் காலங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டும் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான பணிகள் 90 சதவீதம் நடந்து முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு பதவிக்கு வந்தது. 2021-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற தி.மு.க. அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மீதமிருந்த 10 சதவீத பணிகளை கூட முழுமையாக முடிக்கவில்லை.
பணிகள் முழுமையாக முடிக்காமல் மக்கள் வந்து செல்வதற்கு பஸ் வசதிகளை திட்டமிடாமல் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்துநிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல படாதபாடு படுகின்றனர். இதனால் கார் மற்றும் ஆட்டோக்களில் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அந்த பகுதியில் பேருந்துகளை இயக்க போதிய சாலை வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல் அந்த பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. 2023-ம் ஆண்டு திறந்ததாக கூறிக் கொள்வதற்காக அவசர கதியில் பேருந்துநிலையத்தை திறந்தது ஏன்? எனவே கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை அவசர கதியில் திறந்த திராவிட மாடல் தி.மு.க. அரசு பயணிகளுக்கு உடனடியாக உரிய வசதிகளை செய்து தர வேண்டும்" இவ்வாறு எல் முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications