கிளாம்பாக்கத்தில் மலிவு விலை உணவகம்.. முடிச்சூரில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட்.. சேகர்பாபு சொன்ன அப்டேட்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது.

கோயம்பேடுக்கு மாற்றாக கிளம்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 1ஆம் தேதி முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும், கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், இரண்டு பெரிய உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அந்த உணவகங்களில் விலை அதிகமாக இருப்பதால் நடுத்தர மக்கள் வாங்கி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடிப்படை வசதிகளான குடிநீர் உள்ளிட்டவையும் பற்றாக்குறையாக உள்ளதாக தென்மாவட்ட பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். விலை குறைந்த உணவகங்களே இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இங்கு, அம்மா உணவகம், மலிவு விலை உணவகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
வடசென்னை பகுதியை சேர்ந்த திருவெற்றியூர், ஆர். கே. நகர், திரு.வி.க நகர், துறைமுகம் ஆகிய பகுதியை சேர்ந்தோர் மாதவரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்கு செல்லலாம். வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு வருவது கடினமாக உள்ளது என அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக முடிச்சூர் பகுதியில் கட்டி வரும் புதிய பேருந்து நிறுத்தம் இடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அங்கு செல்லும்பொழுது ஆம்னி ஊழியர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும்
என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications