கிளாம்பாக்கம் குழப்பம்.. சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும்.. அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையம் மாற்றப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்தே கடந்த சில வாரங்களாக குழப்பம்தான் நீடிக்கிறது. மணிக்கணக்கில் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

பொதுவாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். நேற்றைய தினம் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் பேருந்துகள் இல்லாமல் அதிர்ச்சியடைந்தனர். பெரும்பாலான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே உறங்கினர்.
ஒரு கட்டத்தில் வெகுண்டு எழுந்த பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் பயணிகளை சமாதானப்படுத்தினர். இதனிடையே திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய திமுக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது… pic.twitter.com/6MfE6V4THn
— K.Annamalai (@annamalai_k) February 10, 2024
பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில் கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications