கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விநாயகர் கோவில் இரவோடு இரவாக இடித்து அகற்றம்- பெரியாரிஸ்டுகள் ஹேப்பி!
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிவசக்தி விநாயகர் கோவில் இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டது.
செங்கல்பட்டு அருகே கிளாம்பாக்கத்தில் ரூ400 கோடியில் புதிய சென்னை புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இப்புதிய பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் வருவதற்கான நுழைவு வாயிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகரில் இருந்து 40 கிமீ தொலைவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டதால் பெரும் சர்ச்சையாகவும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் புதிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. இது தொடர்பாக பகுத்தறிவாளர் கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாக - மக்கள் நலன்கருதி கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது - அதிர்ச்சியை அளிக்கக் கூடியதும் - அரசு ஆணை மீறலுமாகும்.
அறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களிலோ, வளாகத்திலோ எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. நீதிமன்றங்களும், அரசு வளாகத்திற்குள் எந்த மதத் தொடர்பான கோவிலையும் கட்டக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளன. இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் 'திராவிட மாடல்' அரசுக்குச் சொந்தமான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதனை உடனே அகற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்றேல், நீதிமன்றம் வாயிலாகப் பரிகாரம் காண நேரிடும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடக் கூடாது; இவ்வாட்சியின் காவலர்கள் நாங்கள்! என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருந்த சிவசக்தி விநாயகர் கோவில் நேற்று இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது விநாயகர் கோவிலை இடித்துவிட்டதற்கு எதிராகவும் குரல்கள் வெளிப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications