பொற்கால ஆட்சி கொடுத்த கர்மவீரர் காமராஜர்... தலைநிமரச் செய்த தலைவருக்கு 119வது பிறந்தநாள்
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெருந்தலைவரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது
சென்னை: பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.
காமராஜர் 1903 ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்த இவர் பொற்கால ஆட்சி நடத்தினார்.
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பாரத மிகு மின் நிறுவனம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது தான். காமராஜரின் மறைவுக்கு பின், 1976 இல் மத்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

தமிழக முதல்வர்
2006இல் கழக ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஜூலை 15-ம் நாளைக் 'கல்வி வளர்ச்சி நாள்' என அறிவித்து, அரசு ஆணை வெளியிட்டது. இது எதிர்காலத்தில் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அந்த ஆணையை, சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் என்பதை இங்கு நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் வாழ்த்து
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜரை அவர்களது பிறந்தநாளில் வணங்குகிறேன். தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த அன்னாரது நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

கிங் மேக்கர் காமராஜர்
தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் அவர் கிங் மேக்கராகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி கொடுத்த மாமனிதர் காமராஜர், காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றியவர். கடந்த 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளில் மறைந்தார். இவரது மறைவுக்கு பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி காமராஜரை கவுரவித்தது. காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் மாறினாலும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்.












Click it and Unblock the Notifications