சென்னையில் மாலையில் பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை வீட்டுக்கே அழைத்த மாணவி.. திரில்லிங்
சென்னை: மாலையில் பெற்றோர் பார்த்த பையன் ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடித்த கல்லூரி மாணவி, இரவில் அவரது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். 'எனக்கு இவர் தான் கணவன். நான் அவரோடு தான் போகப்போகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப்பாருங்கள் என்று கூறி அதிர வைத்து, அவருடன் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
தனக்கு யாருடன் திருமணம் நடைபெற வேண்டும் என்பதை ஆண் அல்லது பெண் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பெற்றோரே மாப்பிள்ளை பார்த்தாலும் அவரை ஏற்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதை அந்த பெண் தான் முடிவு செய்கிறார். அதேநேரம் காதலன் ஏழையாகவோ, வேலைவெட்டி இல்லாதவராகவோ இருந்தால் பெற்றோர் ஏற்பது இல்லை.. அதேபோல் வேறு சாதியாக இருந்தாலும் காதலை ஏற்பது இல்லை.. இப்படியான சூழலை பெற்றோர் மற்றும் உறவினர்களையே மண்படத்தில் வைத்து சவால் விட்டு தனது காதலனை திருமணம் செய்துள்ளார் இளம் பெண். சென்னை கேகே நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கேக நகரைச் சேர்ந்த பெண் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி பிரபல தனியார் நிறுவனத்தில் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞரை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
கல்லூரி மாணவியின் காதலை அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன். வேறு மாப்பிள்ளை பார்த்துள்ளார்கள். மாப்பிள்ளையும் முடிவானது. இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் நேற்று முன்தினம் மாலை கே.கே.நகரில் உள்ள மாணவியின் வீட்டில் நிச்சயதார்த்த விழா நடந்திருக்கிறது.
அப்போது, அந்த மாணவி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு தனக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் மாலையும் மாற்றிக்கொண்டிருக்கிறார். பின்னர் சந்தோஷமாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உற்றார், உறவினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இரவு விருந்து நிகழ்ச்சியு நடந்த போது தான், அமைதியாக இருந்த கல்லூரி மாணவி புயலாக மாறினார். இரவில் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்தார்
தனது காதலனுடன் செல்போனில் பேசி அவரை தனது வீட்டிற்கு வருமாறு அழைக்கவே, காதலனும் தனது நண்பர்கள் 5 பேரோடு மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இரவு விருந்தில் சந்தோஷமாக இருந்த குடும்பத்தினரிடம் 'எனக்கு இவர் தான் கணவன். நான் அவரோடு தான் போகப்போகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப்பாருங்கள்' என்று அந்த மாணவி காதலனை அழைத்துக் கொண்டு புயல் போல் வெளியேறினார்.
அப்போது தடுக்க முயன்ற உறவினர்களை காதலுடன் வந்த நண்பர்கள் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்கள். எனினும் மாணவியின் உறவினர் ஒருவர் முன்னே சென்று தடுக்க முயன்றார். அவரை சினிமாவில் வருவதுபோல் கல்லூரி மாணவியின் நண்பர்கள் தாக்கினார்கள் . தொடர்ந்து அந்த பெண், தனது காதலனோடு வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, கேகே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரணியன் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து கேகே நகர் காவல் நிலையத்திற்கு காதலனுடன் அந்த மாணவி வரவழைக்கப்பட்டார். அப்போது அந்த மாணவி பேசுகையில் , நேற்று மாலை தனது காதலனை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு 21 வயதாகிறது. நான் சட்டப்படி மேஜர். எனவே நான் செய்து கொண்ட திருமணத்தை ஏற்றுக்கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள் என்று போலீசாரிடம் அந்த மாணவி கூறினார்.
மேலும் நான் ஏற்கனவே காதலனை திருமணம் செய்துவிட்டேன்.. என்னோடு நடந்த நிச்சயதார்த்தம் செல்லாது. என்னை வாழ்த்துங்கள்' என்று இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் கல்லூரி மாணவி வேண்டுகோள் வைத்தார். இதையடுத்து போலீசாரும் மணமக்களை வாழ்த்தினார். மாணவியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடமும் சமாதானம் பேசப்பட்டது. குடும்பத்தாரும் மாணவியின் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். துணிச்சலாக வீட்டை விட்டு வெளியேறி காதலனை கைப்பிடித்த மாணவியை போலீசார் வாழ்த்தி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அதேநேரம் மணப்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்த அந்த பையனின் நிலை தான் பரிதாபம் ஆனது. தான் திருமணம்செய்ய போவதாக நினைத்துக்கொண்டிருந்த பெண், வேறுஒருவரை திருமணம் செய்த தகவலால் கவலையுடன் திரும்பி சென்றார்.












Click it and Unblock the Notifications