எதை பேசணுமோ அதை பேசவில்லை பியூஷ் கோயல்! இதுல அண்ணாமலை வேற இப்படி சொல்றாரு -கொங்கு ஈஸ்வரன் விரக்தி!
சென்னை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது துறையை பற்றி பேசுவார் என பார்த்தால், ரேஷன் கடையை பற்றி பேசுகிறார் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு இனிவரும் மத்திய அமைச்சர்களாவது அவரவர் துறை சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஜவுளி பொருட்கள்
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி மிகவும் சரிந்து இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகின்ற ஜவுளி பொருட்களின் அளவு வரலாறு காணாத அளவில் குறைந்திருக்கிறது. நிலையில்லாத பஞ்சு விலை ஏற்றமும், ஒன்றிய அரசினுடைய ஏற்றுமதியாளர்களுக்கு அனுசரணை இல்லாத ஏற்றுமதி கொள்கையும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்ற பொருள்கள் கப்பலில் அனுப்பும் பொழுது பயண நேரம் கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது.

துறைமுகங்கள் இல்லை
இத்தனை ஆண்டுகள் கழித்தும் தென் மாநிலங்களில் இருந்து நேரடியாக அமெரிக்காவிற்கு பொருட்களை அனுப்பக்கூடிய வசதியான துறைமுகங்கள் இல்லை. கொழும்பு துறைமுகத்தையோ அல்லது சிங்கப்பூர் துறைமுகத்தையோ நம்பித்தான் நாம் ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ரஷ்யா, உக்ரைன் போர் நடவடிக்கைகளும் நம்முடைய ஏற்றுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பியூஷ் கோயல்
இந்தியாவினுடைய ஏற்றுமதி வர்த்தகமும், ஜவுளி துறையும் எப்போதும் இல்லாத அளவிற்கு சிக்கல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் போது இந்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் எந்த நம்பிக்கையும் கொடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பியூஷ் கோயலின் தமிழக விஜயம் நலிந்து கொண்டிருக்கின்ற தமிழகத்தினுடைய தொழில்துறையை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தால், அவர் அதைப் பற்றி எல்லாம் பேசாமல் தமிழகத்தினுடைய ரேஷன் கடைகளை பற்றி பேசுகிறார்.

அண்ணாமலை
எதிர்பார்ப்போடு காத்திருந்த தமிழகத்தினுடைய சிறு, குறு தொழில் துறைகளுக்கு அவருடைய பேச்சுகள் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இந்திய தேசத்தினுடைய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தொழில்துறையினுடைய பிரச்சனைகளை பேசி தீர்வு காணாமல் அரசியல் மட்டும் பேசி இருப்பது மேலும் நம் வேதனையை கூட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்னும் தமிழகத்திற்கு 50 ஒன்றிய அமைச்சர்கள் வர இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். இனிவரும் அமைச்சர்களாவது அவரவர் துறை சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications