ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு வைத்த முதல்வர்! எதிர்கால சந்ததியை காத்த அரசு! கொங்கு ஈஸ்வரன் பாராட்டு மழை!
சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்து உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினர் தவறான வழிக்கு சென்று விடாமல் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் கட்சி தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
கடந்த சில நாட்களாக அரசை விமர்சிக்கும் தொணியில் அறிக்கைகள் வெளியிட்டு வந்த ஈஸ்வரன், இப்போது முதலமைச்சரை பாராட்டு மழையால் நனைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த பதிவின் விவரம் வருமாறு;
தற்போது பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத இளைஞர்களே இல்லை என்கிற நிலை தற்போது உள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது முகநூல் மற்றும் வேறு சமூக வலைதள பக்கங்களில் தானாகவே இந்த ஆன்லைன் ரம்மி சம்பந்தமான விளம்பரங்கள் இடை இடையே வருகிறது.
அவர்களையே அறியாமல் அந்த விளையாட்டிற்குள் சென்று அடிமை ஆகி பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. அவ்வாறு இழந்துள்ள செய்திகளும் வந்துள்ளது.
மேலும் இது சம்பந்தமாக நிறைய பேர் பணத்தை இழந்ததின் காரணமாக அடிக்கடி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் செய்தித்தாள்களில் அண்மைக்காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
எனவே எதிர்கால சந்ததி நலன் கருதியும், அவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையில் சிக்கி தவறான வழிக்கு சென்று விடாமல் தடுக்க ஆன்லைன் ரம்மியை தடை செய்து உத்தரவு பிறப்பித்து அதற்குரிய விளம்பரங்களுக்கும் சேர்த்து தடை பிறப்பித்த மக்கள் நலன் காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் கட்சி தேசிய கட்சியின் சார்பாகவும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.