அரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...
Recommended Video
சென்னை: திமுகவில் கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக திருச்சி மாவட்டச் செயலாளராக உள்ள கே.என்.நேரு அரசியலில் தனது வாரிசை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவிற்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்திக்கொடுத்த நகரம் திருச்சி. அந்த திருச்சியில் திமுகவின் அடையாளமாக திகழ்பவர் கே.என்.நேரு. 1993-ல் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த என்.செல்வராஜ் மதிமுகவுக்கு சென்றதை அடுத்து, கே.என்.நேரு மாவட்டச் செயலாளர் ஆனார். ஒரு காலத்தில் திமுகவின் சோழ மண்டல தளபதியாக திகழ்ந்த கோ.சி.மணி, நேருவை திருச்சி மாவட்டச் செயலாளர் ஆக்குமாறு கருணாநிதியிடம் பரிந்துரைத்தார்.

அதட்டல் பேச்சு
கட்சியினரிடம் அதட்டலாக பேசுவது கே.என். நேருவின் வழக்கம். அதேசமயம் யாரை திட்டி அனுப்புகிறாரோ அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்துவிடுவார். அது தான் அவரது ப்ளஸ் பாயிண்ட். மேலும், மேடைகளில் பேசினாலும், பேரவையில் பேசினாலும் எழுதி வைத்துக்கொண்டு தூய தமிழில் பேசமாட்டார். கொச்சைத்தமிழில் தனது பேச்சைக் கேட்பவர்களை சிரிக்க வைக்கும் வகையில் படபடவென்று பேசுவார்.

புகார்
நேருவுக்கு எந்தளவுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு அவரை பிடிக்காதவர்களும் திருச்சி மாவட்ட திமுகவில் இருகின்றனர். அதற்கு அவர்கள் காரணமாக கூறுவது நேரு தன்னை மீறி யாரையும் வளரவிட மாட்டார் என்பது தான். மேலும், ஒன் மேன் ஆர்மியாக செயல்பட வேண்டும் என அவர் நினைக்கிறார், ஒரு பிறந்தநாள், திருமண நாள் என்று தலைவரை சந்தித்தால் கூட அது அவருக்கு கோபத்தை அளிப்பதாக கூறுகின்றனர் நேருவை பிடிக்காதவர்கள்.

உற்சாகம்
இந்நிலையில், அன்பில் மகேஷ்பொய்யாமொழியின் அரசியல் வருகை திருச்சி மாவட்ட திமுகவில் உள்ள இளைஞர்களுக்கும், நேருவால் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகும் மகேஷின் செயல்பாடுகள் திருச்சி திமுகவினரிடையே கொண்டாடப்படுகிறது.

வாரிசு
நேரு தனது மகன் அருணை அரசியல் களமிறக்க நினைப்பதாகவும், ஆனால் அவர் அரசியலே வேண்டாம் என பெரிய கும்பிடு ஒன்று போட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மறைந்த தனது தம்பி ராமஜெயத்தின் மகன் விநோத்தை அரசியலுக்கு கொண்டு வருவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications