தவெக துண்டு.. கத்தியுடன் சுற்றியவர் எங்க கட்சிக்காரரே இல்லை.. தவெக சார்பில் விளக்கம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழாவில் தவெக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. தவெக கட்சித் துண்டு அணிந்த நபர் ஒருவர் பட்டாக் கத்தியுடன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் தவெக நிர்வாகி இல்லை என தவெக மாவட்ட செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் பிறந்தநாள் விழாவை ஒட்டி, அக்கட்சியினர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் அன்ன தானம், ரத்த தானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி நகர செயலாளர் சசிகுமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் நடத்தப்பட்டது. கீழ்புதூர் பகுதியில் சலீம் என்பவர் நகர செயலாளர் சசிகுமார் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 2 கார்களில் வந்து விஜய்யின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நட முயன்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த தபு என்கிற தப்ரீஷ் தனது நண்பர்களுடன் அங்கு வந்துள்ளார்.
அப்போது கீழ் புதூர் பகுதியை சேர்ந்த தவெக கிளை தலைவர் விஜய் என்கிற நாகராஜ், "இது என்னுடைய ஏரியா? இங்கு வந்து எப்படி நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம்? என் தலைமையில் நான் இரவு நிகழ்ச்சி நடத்திக் கொள்கிறேன்" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தபு என்கிற தப்ரீஷ் தன்னிடம் இருந்த பட்டா கத்தியை எடுத்து நாகராஜ் தரப்பினரை தாக்கியதாக தெரிகிறது. இதற்கு நாகராஜ் தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், பார்த்திபன், முருகேசன், சூர்யா, அருண், ஹரிராம், சஞ்சய் ஆகியோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த ஆறு பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டுச் சென்றதால் அந்த பகுதி மக்கள் காரின் முன் பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக தலைவர் விஜய் பிறந்தநாளில் நடந்த இச்சம்பவம் பேசுபொருளாக மாறியது. தவெக கட்சிக்கொடி துண்டு அணிந்த நபர் கத்தியுடன் சுற்றிய வீடியோ வைரலான நிலையில், கத்தியுடன் சுற்றிய நபர் தவெக கட்சியை சேர்ந்தவர் இல்லை என கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக செயலாளர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்த என்.தபரேஷ் (தபூ) என்பவர் கடந்த 15 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை தோளில் போட்டுக்கொண்டு, கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இவரைப் பற்றி விசாரித்த போது இவர் ஒரு மாற்றுக்கட்சியில் பயணித்தவர் என்பதும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இவருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதும், கழகத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இவர் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே மேற்கண்ட நபருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதைத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications