மாஜி விஜயபாஸ்கர் வீடு எவ்ளோ பெரிசு? சும்மா பக்கிங்காம் அரண்மனை போல் இருக்கு.. ஆர்.எஸ். பாரதி தாக்கு
சென்னை: கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் விரைவில் வெளியாகும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை குறித்த வழக்கு தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் எடப்பாடி பழனிசாமி போராட்டம் என்ற பெயரில் தன்னுடைய வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தி பேசியுள்ளார். அதாவது யாரோ ஒருவர் எழுதி கொடுத்ததை பழனிசாமி பேசியுள்ளார்.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் வழக்கு துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பழனிசாமி போராட்டங்களை நடத்தி பொய் புகார்களை தெரிவித்து வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார். சொத்து வரியை அதிகரித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு யார் காரணம் என்பதை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதுவும் எடப்பாடி முன்புதான் ஸ்டாலின் பேசியிருந்தார். அப்போது எழுந்து எதையும் பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துகிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எலிசபெத் ராணியின் வீட்டை விட பெரியதாக கட்டியுள்ளனர். விஜய பாஸ்கரின் வீடோ பக்கிங்காம் அரண்மனை போல் உள்ளது.

பழனிசாமியின் உண்மையான முகம்
இன்னும் சில நாட்களில் பழனிசாமியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வரும். திமுகவின் 15 மாத ஆட்சியிலும் அதிமுகவின் ஆட்சியிலும் நடந்த கொலை கொள்ளைகள் குறித்து பேச தயாரா? ஆன்லைன் ரம்மி குறித்து பேசுகிறாரே, அன்று மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த போது ஆன்லைன் ரம்மிக்கு எடப்பாடி பழனிசாமி தடை கோர வேண்டியதுதானே!

4 பேரா
திமுகவுக்கு 4 தலைமை உள்ளதாக கூறுகிறார் எடப்பாடி. அநேகமாக இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 பேர் அதிமுகவுக்கு தலைமை வகிக்கிறார்கள் அல்லவா அதை மனதில் வைத்துதான் சொல்லியிருப்பார். பெரியார் கூறிய கருத்துகளைத்தான் ஆ ராசா பேசியிருந்தார் என ஆர் எஸ் பாரதி தெரிவித்தார். சென்னையில் தாம் இருப்பது வாடகை வீடு என்றும் சொந்த வீடு இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications