"கொங்கு நாடு.." ஒற்றை வார்த்தைக்கு பின்னாடி இத்தனை பிளானா? மறந்து போச்சே மக்கள் பிரச்சினைகள்!
சென்னை: கடந்த சில நாட்களாக, நீங்களே கவனித்து இருக் கூடும்.. சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் ஒரு தேவையற்ற பேச்சு ஓடிக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
இந்த வீணான விவாதம், ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளை திசைதிருப்பி கொண்டு இருக்கிறது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 16ல் திறப்பு: தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
ஆம்.. கொங்கு நாடு என்பதை பற்றி எழுந்துள்ள விவாதங்களும், அதற்காக நேரமும் காலமும் விரயமாவது பற்றித்தான் சொல்கிறோம்.
கால நேர விரையம்
தமிழ்நாட்டில் இருந்து மேற்கு மாவட்டங்களை தனியாக பிரித்து கொங்குநாடு என்ற பகுதி உருவாக்கப்படுமா, அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்று ஒரு தரப்பும், அப்படி உருவாக்கக் கூடாது என்று இன்னொரு தரப்பும் தொடர்ந்து தங்கள் நேரத்தையும் கவனத்தையும் வீணாக்கிக் கொண்டு இருப்பதை உங்களில் பலரும் கவனித்து இருப்பீர்கள்.
கொங்கு நாடு சர்ச்சைகள்
ஒன்றியம் என்று சொல்வது மக்களின் அடிப்படை பிரச்சினைகளிலிருந்து தமிழக அரசு கவனத்தை திசை திருப்ப சொன்ன வார்த்தை என்று விமர்சனம் செய்தவர்கள்.. இன்று கொங்கு நாடு என்று சொல்லி புளகாங்கிதம் அடைவதை பார்க்க முடிகிறது. ஒன்றியம் என்ற வார்த்தை கவனத்தைத் திசை திருப்பும் செயல் என்றால் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள் என்ற கேள்விக்குதான், இதுவரை பதில் இல்லை.
ஊதி பெரிதாக்கிய விவாதம்
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட ஆண்டுகள் கோரிக்கை. எத்தனையோ போராட்டங்கள் உயிரிழப்புகள் நடந்தன. ஆனால் மேற்கு மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திராத நிலையில், வெயிலுக்கு ஊட்டிக்கும், குளிருக்கு சென்னை பீச்சுக்கும், தமிழக மக்கள் போய் வந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென கொங்கு நாடு என்று ஒரு தனி மாநிலம் உருவாக போவதாக வதந்தி றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து, அதையும் 4 பேர் பேசி பொழுதுபோக்க ஆரம்பித்துள்ளனர்.
நாடு காணாத மோசமான நிலை
நாடு இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சுகாதார பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறது. சொல்லப்போனால்.. சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகத்தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்த்தன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இன்று இருப்பவர்கள் அடுத்த நாள் இருப்பார்களா என்ற நிலையற்ற தன்மையில் மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அச்சத்தை போக்க போதிய அளவுக்கு தடுப்பூசிகளை செலுத்த வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. மக்கள் அனைவரும் ஒருமித்த குரலோடு இதை நோக்கி கேள்வி எழுப்பினால் உலகின் எந்த மூலையில் இருந்தாவது தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற துடிப்பு ஆள்பவர்களுக்கு வரும். ஆனால் உயிர் காக்கும் தடுப்பூசி பற்றி பேசுவதை விட்டுவிட்டு, "கொங்கு நாட்டுக்கு கோவையை தலைநகராக்கலாமா?" என்று கோக்குமாக்குத் தனமாக பேசிக்கொண்டிருக்கிறது சமூகத்தின் ஒரு பிரிவு.
பொருளாதார சரிவு
நோய் மட்டுமா மக்களை உருக்குலைத்துள்ளது.. நிதிப் பற்றாக்குறையும் மனித வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் காலகட்டம்தானே இது. ஒவ்வொரு அரசும் மக்கள் கையில் பணத்தை நேரடியாக கொடுத்து சாப்பாட்டுக்கும் அடிப்படை சுகாதாரத்திற்கும் வழி செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். ஆனால் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் வழித்து எடுத்துக் கொள்வது போல உயர்ந்து உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. 1990-களின் ஆரம்பத்தில் ஒற்றை டிஜிட்.. அதாவது பத்து ரூபாய்க்கு கீழே இருந்த பெட்ரோல் விலை இன்று 3 டிஜிட் தாண்டியுள்ளது. அதுவும் உரடங்கு காரணமாக மக்கள் வேலையில்லாமல், வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் இப்படி தலையில் விழுந்த பெரிய இடி போல உயர்ந்துள்ளது. ஆனால் மக்கள் அனைவரும், சேர்ந்து நின்று, விலையை குறையுங்கள் என்று வலியுறுத்தாமல் "சேலம் கொங்கு நாட்டுக்குள் வருமா" என்று ஏகடியம் பேசிக் கொண்டிருக்கிறார்களே இந்த கொடுமையை என்னவென்று சொல்ல.
வெங்காய விலை உயர்வுக்கு ஆட்சியே காலி
ஜெய்ஹிந்த் விவகாரத்திற்கு உரியவர் விளக்கம் கொடுத்தபிறகும், ஒரு வாரம் பேசுவது, தவிக்கும் தமிழ்நாட்டு விஷயங்களுக்கு மத்தியில் தேவையின்றி கொங்கு நாடு என்பது என, அத்தனை விஷயங்களும், ஏதோ ஒரு நோக்கத்திற்காக கிளப்பி விட்டதை போலவே இருக்கிறது என்பதுதான் பலரது சந்தேகமாக இருக்கிறது. நாடு இதற்கு முன்பு இப்படி இருந்தது இல்லை. வெங்காய விலை ஏற்றத்தால் டெல்லியில் ஆட்சியே பறிபோயுள்ளது. மக்கள் தங்களுக்கான தேவை எது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். அதனால் அரசுகள் அச்சப்பட்டன. ஆனால் கவனத்தை திசை திருப்புதல் ஒரு கலையாக மாறிய பிறகு, மக்களின் குரல்கள் வெளியே கேட்பதில்லை.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு யுக்தி
தமிழ்நாடு மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பிரச்சினையை வைத்து திசை திருப்பப்படுகிறது. தேர்தல் நெருங்க உள்ள உ.பி.யில் மக்கள் தொகை கொள்கை பேசு பொருளாக மாறுகிறது, முஸ்லீம்கள்தான் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்று ஒரு தரப்பும், எங்களை குறை சொல்வதா என மறுதரப்பும் உரசும் நேரத்தில், ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கிவிட முடிகிறதே கவனித்துள்ளீர்களா. ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் வார்த்தைகளும் இதை உறுதி செய்கின்றன. "எங்கள் ஆட்சி காலத்தில் மட்டும் இப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருந்தால், மக்கள் எங்களை வெளியே நடமாடவே விட்டிருக்க மாட்டார்கள்" என்று கட்சித் தொண்டர்களுடனான கலந்துரையாடலின்போது ஆச்சரியமாக வினவினார் லாலு. மக்கள் திடீரென பணக்காரர்களாகிவிட்டார்களா, ஏன் இந்த மவுனம் என்பது லாலுவின் கேள்வியில் உள்ள பொருள். கவனத்தை திசை திருப்பினால் காய் நகர்த்தல்கள் எளிது என்பதுதான் தற்போதைய அரசியல் தந்திரம் என்பதை அவர் சற்று தாமதமாக புரிந்து கொண்டிருக்க கூடும்.
ஆபத்தான அரசியல்
ஒரு கட்சி இதை ஆரம்பித்து வைத்திருக்கலாம். ஆனால் பல கட்சிகளும் இதிலிருந்து பாடம் கற்று தங்களது ஆட்சியின்போது இதே கவனச் சிதறல் கலையை கையில் எடுக்க கூடும். அப்போது நாட்டு மக்கள் தங்களுக்கு எது அடிப்படை தேவை என்பதையே மறந்துபோகும் மாய உலகம் உருவாகக் கூடும். இது ஆபத்தான அரசியலன்றி வேறென்ன. தனி கொங்கு நாடு வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதை நிறைவேற்றித் தருவது அரசின் கடமை என்று கூறியுள்ளார் ஒரு அரசியல் கட்சி தலைவர். "பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று நாட்டின் எல்லா மக்களும் விரும்புகிறார்களே, அதை நிறைவேற்றி வைப்பீர்களா" என்று பதில் கேள்வி கேட்கத்தான் ஆளில்லை.