அதிமுகவுக்கு தக்க பதிலடி கிடைக்கும்.. பொங்கி எழுந்த கொங்கு ஈஸ்வரன்.. காரணம் இதுதான்!
சென்னை: கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி தலைவர் கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அதிமுகவினரை வன்மையாக கண்டிக்கின்றோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று தலைவர் கோவை செழியன் அவர்களின் 90-வது பிறந்தநாளை கொண்டாட கொங்கு மண்டலம் முழுவதும் ஆங்காங்கே அவருடைய உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் செய்யப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்று இராசிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவை செழியன் அவர்களுக்கு மரியாதை செலுத்த செய்யப்பட்ட ஏற்பாடுகளை அதிமுகவினர் அராஜக போக்கில் தடுத்து அகற்றியதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கதை எழுதுகிறார்
எம்ஜிஆரால் முதலாளி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் கோவை செழியன் அவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் உள்ளிட்டவர்களை வைத்து படம் தயாரித்து திரைத்துறையில் அன்றைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஒருவராக கோவை செழியன் அவர்கள் திகழ்ந்தார். அவருடைய பல படங்களுக்கு கலைஞர் அவர்கள் கதை எழுதியிருக்கிறார்.
ஏற்றுக் கொள்ள முடியாதவர்
எம்ஜிஆர் அவர்களால் போற்றப்பட்ட நபர்களில் ஒருவரான கோவை செழியன் அவர்களின் பிறந்தநாள் விழா அனுசரிப்பதை அவமதிக்கும் நோக்கில், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் வழிவந்தவர்கள் நடந்து கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆறாத வடு
கோவை செழியன் அவர்கள் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் கொங்கு வேளாள சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர். அப்படிப்பட்ட மனிதரை கொங்கு மண்டல மக்கள் போற்றி உணர்வோடு அவருக்கு மரியாதை செய்வதை அதிமுகவினர் அவமதித்திருப்பது அனைவருடைய மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கிறது.
தக்க பதிலடி
இதுபோன்ற அதிமுகவின் அராஜக போக்கை கொங்கு மண்டல மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். கோவை செழியனை அவமதித்தது முதலமைச்சரின் உத்தரவா, மாவட்ட அமைச்சரின் உத்தரவா அல்லது சட்டமன்ற உறுப்பினரின் உத்தரவா. இந்த செயலுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கிடைக்கும்" இவ்வாறு கூறினார்.