திடீரென ‘மஞ்சள்’ நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு.. அதிர்ந்து போன மீனவர்கள்.. பெரிய ஆபத்தா?
சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆறு திடீரென மஞ்சள் நிறமாக மாறியதால் அப்பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொற்றலை எனப்படும் கொசஸ்தலை ஆற்றினை நம்பித் தான் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் தொழில் நடத்தி வருகின்றனர். கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கும் என்பதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமே இதனை நம்பித்தான் உள்ளது.

இந்நிலையில், இன்று திடீரென எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. அந்த மஞ்சள் நிறம் பரவி தற்போது ஆறு முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கிறது. இதனைப் பார்த்து மீனவ மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொசஸ்தலை ஆற்றில் மஞ்சள் நிறத்தில் கழிவு நீர் கலந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கொசஸ்தலை ஆற்றில் மஞ்சள் நிறத்தில் கழிவு நீர் கலந்து வருகிறது. இந்த கழிவு நீர் இப்படியே கலந்து கொண்டிருந்தால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றுப் பகுதிக்கு அருகில் அமைந்திருக்கக் கூடிய தொழிற்சாலைகளில் இருந்து இதுவெளியேறி வருகிறதா என்று உடனடியாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications