வீட்டு வாடகைக்காக மாதம் 9 லட்சம் வாங்கும் அண்ணாமலையை விசாரிக்காதது ஏன்?.. கோவை செல்வராஜ் விளக்கம்
சென்னை: வீட்டு வாடகைக்காக மாதம் 9 லட்சம் வாங்கும் அண்ணாமலையை அமலாக்கத் துறையினர் விசாரிக்காதது ஏன் என கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வசம் இருந்த மின்சார துறை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.
அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. செந்தில் பாலாஜி கைது தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் திமுக தலைமை கழக செய்தித் தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், அமலாக்கத் துறை கடந்த 9 ஆண்டுகளில் 3,117 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 27 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜக தங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்க அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார்.
இது போன்ற ஒடுக்குமுறையால் நாடாளுமன்றத் தேர்தலில் 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லாது என்பதால் இப்போது செந்தில் பாலாஜியை கைது செய்து பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல சிபிஐ அதிகாரியா, இல்லை அமலாக்கத் துறை அதிகாரியா. சிபிஐ, அமலாக்கத் துறை குறித்து பேசுவதற்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
அண்ணாமலையின் வீட்டு வாடகை, கை செலவிற்கு அவருடைய நண்பர்கள் ரூ 9 லட்சம் தருவதாக அவரே தெரிவித்திருந்தார். இதுவே இரண்டாண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதை அமலாக்கத் துறை விசாரிக்காதா. நண்பர்கள் பணம் கொடுத்ததற்கும் வாங்கியதற்கும் வருமான வரியை அண்ணாமலையும் அவரது நண்பர்களும் தாக்கல் செய்துள்ளார்களா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அமலாக்கத் துறை இதற்கு நடவடிக்கை எடுக்குமா?
ஆருத்ரா நிதி நிறுவன வழக்கில் இருப்பவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் பாஜகவில் கட்சி பதவி கொடுத்ததாக கைதானவர்கள் சொல்லி வருகின்றனர். இதற்கு பாஜக தலைமையும் அண்ணாமலையும் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்திய அரசியல் அமைப்புபடி செயல்படாமல் அதிகாரத்தை மீறி செயல்படுவதால் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications