இரவில் பொங்கிய கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு.. தூங்கியவர்களை லத்தியால் தாக்கிய சென்னை போலீஸ்.. ஒரே பரபரப்பு
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.. நள்ளிரவு நேரத்தில் அப்படி என்ன நடந்தது சென்னையில்?
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற காரணத்தை முன்னிறுத்தி, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. இதன்காரணமாக, அரசு விரைவு பஸ்கள் உட்பட ஆம்னி பஸ்கள் எல்லாமே கிளாம்பாக்கத்துக்கு போய்விட்டதால், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இயக்கப்பட்டு வருகின்றன..

பஸ்கள்: இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை.. பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. முன்புபோல பஸ் கோயம்பேடு பிஸியாக இல்லாத காரணத்தினால், சமூக விரோதிகள், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக 2 மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரபரத்தன.
அதாவது, சுற்றுவட்டார பகுதிகளிலிருக்கும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் போன்றோர், குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பதுங்கி கொள்வதாகவும், மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிடுவதாகவும் புகார் கிளம்பியது.
கோயம்பேடு: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே சிலர் கைவரிசையையும் காட்டுவதால், குறைந்த அளவுக்கு வந்து போகும் பயணிகளும், அச்சமடைந்துள்ளதாகவும், எனவே கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் போதுமான பாதுகாப்பை அதிகரித்து, சமூக விரோதிகளின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் கோயம்பேடு வியாபாரிகளே மீடியா மூலமாக காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து, காவல்துறை தரப்பிலும் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளேயே இரவு தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.. பஸ் ஸ்டாண்டில் தூங்கிவிட்டு, மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பி பணிக்குச் சென்றுவிடுவார்கள்.. பிறகு பணிமுடிந்து மறுபடியும் இரவில் வந்து தங்கிவிடுவார்கள்.
மாற்றுத்திறனாளிகள்: இப்படி இங்கு வந்து தூங்குபவர்களுக்கு நிரந்தர வீடு, வாசல் எதுவும் கிடையாது.. இவர்களில் பெரும்பாலானோர் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் ஆவர்..
இப்படித்தான், நேற்றிரவும் இவர்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் தூங்கி கொண்டிருந்திருக்கிறார்கள்.. அப்போது அங்கு வந்த போலீசார் திடீரென இவர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறது.. அங்கிருந்த அனைவரையுமே நள்ளிரவு என்றும் பாராமல் விரட்டியிருக்கிறது..
பரபரப்பு: தூங்கி கொண்டிருந்த நபர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பது மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. போலீசாரின் இந்த திடீர் தாக்குதலால், சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளித்துபோய், பஸ் ஸ்டாண்டு வாசலிலேயே உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்..
வாசலிலேயே பொதுமக்கள் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு உட்கார்ந்து விட்டதால், பேருந்து நிலையத்திற்கு உள்ளே மாநகரப் பேருந்துகள் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. ஆதரவின்றி தங்கிய தங்களை பேருந்து நிலையத்தின் உள்ளே தங்கக்கூடாது என கூறி போலீஸ் தாக்கி துரத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்திருப்பது, பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications