கோயம்பேடு காலி.. பஸ் ஸ்டாண்டும் போச்சு.. இதென்ன புதுசா? யார் இவங்க? கிளாம்பாக்கத்தால் அடுத்த ரிசல்ட்
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, வெறிச்சோடி காலியாக உள்ள நிலையில், புது சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளது.. என்ன அது?
சென்னையில் டிராபிக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விரைவு பஸ்கள் உட்பட ஆம்னி பஸ்கள் எல்லாமே கிளாம்பாக்கத்துக்கு போய்விட்டன.
வெறிச்சோடியது: அதனால், பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இயக்கப்பட்டு வருகின்றன..

இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை.. பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் நடமாட்டம் இல்லை.. பஸ் ஸ்டாண்டிற்குள்ளிருக்கும் 6 பிளாட்பாரம்களில் 2100 பஸ்கள் தினமும் வந்த நிலையில், தற்போது வெறிச்சோடி உள்ளது.
பயணிகளின் கூட்டம் இல்லாததால், இதுவரை அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், ஸ்நாக்ஸ் கடைகளும் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன.. அதேபோல, எலக்ட்ரானிக் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகளிலும் கூட்டம் இல்லை.. மேலும், பிளாட்பார்ம் வியாபாரிகளும், மெல்ல மெல்ல கடைகளை காலி செய்துவிட்டு கிளம்பி வருகிறார்கள்.. இதனால், பஸ் கோயம்பேடு ஸ்டாண்டே காலியாக காணப்படுகிறது..
சமூக விரோதிகள்: இந்த சந்தர்ப்பத்தைதான் சமூக விரோதிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்களாம்.. சுற்றுவட்டார பகுதிகளிலிருக்கும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் போன்றோர், குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பதுங்கி கொள்கிறார்களாம்.. போதாக்குறைக்கு மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிட்டு பதுங்கிவிடுவதாக புகார் கிளம்பி உள்ளது.
இதுகுறித்து, கோயம்பேடு வியாபாரிகள் சிலர் இதை பற்றி சொல்லும்போது, சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை தமிழக அரசு திறந்துவிட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்தான்.. ஆனால், கோயம்பேடு நிலைமை மோசமாகிவிட்டது.
ரவுடிகள்: ஏற்கனவே, இங்கு கடை வைத்து பிழைத்து கொண்டிருந்த வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.. ஆட்டோ டிரைவர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் ரவுடிகள், திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்டில் வந்து பதுங்கிவிடுகிறார்கள்..
மேலும், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள்யே கைவரிசையையும் காட்டுகிறார்கள். இதன்காரணமாக, குறைந்த அளவுக்கு வந்து போகும் பயணிகளும், இவர்களை கண்டு பயந்து போயிருக்கிறார்கள். எனவே, வெறிச்சோடி கிடக்கும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் போதுமான பாதுகாப்பை அதிகரித்து, சமூக விரோதிகளின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications