வணிக வளாகம் வேண்டாம்.. கோயம்பேட்டில் இதை கொண்டு வாங்க.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த ஐடியா
சென்னை: கோயம்பேடு பஸ் நிலையம் இருந்த இடத்தில் பொது பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு தற்போது பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்தே கிளம்பி செல்கின்றன. வழக்கமாக பொங்கல் பண்டிகை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் தற்போது பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் கொண்டு செல்லப்பட்டு இருப்பதால் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மாநகர பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் ஓராண்டுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனவும் அதன்பிறகு அதில் பெரிய திட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வணிக வளாகம் கட்டக் கூடாது எனவும் கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு கீரை வணிக வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு மலர் காய் கனி வியாபாரிகள் நலச்சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- கோயம்பேடு வணிக வளாகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய வளாகம். ஆனால், அடிப்படை வசதிகள் இல்லை. சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றியுள்ளார்கள்.
கோயம்பேட்டில் மாநகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்கிறது. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த இடத்தில் பொது பசுமை பூங்காவை அரசு உருவாக்க வேண்டும். இது மிக மிக அவசியமானது. அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் பிரமாண்ட திட்டங்கள் வைத்துள்ளோம் என்று கூறினார். வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை அவர்- மாற்றிக்கொள்ள வேண்டும்.
சென்னையில் இந்த பூங்கா மிகவும் அவசியமான ஒன்று. நீரிழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற தொற்றா நோய்களை போக்குவதற்கு இந்த பசுமை பூங்கா மிகவும் அவசியம். சென்னையில் பசுமை பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். பசுமை பூங்கா அமைப்பதற்கு பதிலாக வேறு எதாவது கொண்டுவர நேரிட்டால் சுற்றியுள்ள மக்களை திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்துவோம். கோயம்பேடு வணிக வளாகத்தை திருமழிசைக்கு மாற்ற முயன்றாலும் பாமக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications