சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இருக்கிறதா.. துணை ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு பேட்டி
சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 10 ஆண்டுகளில் அதிமுக அரசு 82 கல்லூரிகளை கொடுத்துள்ளது.
கிருஷ்ணகிரியில் வரும் 4-ஆம் தேதி மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முதல்வரும் துணை முதல்வரும் நடத்தி வைத்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரும் முன்னர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு செய்யாததால் இந்த அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மக்கள் உணர்வு, கொள்கை அமைத்து மக்களிடம் சென்று வென்றால் தான் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் சிந்தனை வரும். ஆனால் ஸ்டாலின் வியாபாரம் செய்யும் கார்பரேட் கம்பெனிகளை அழைத்தால் மக்களிடம் ஈர்ப்பு இருக்காது.
அதிமுகவை வெல்ல முடியாததால் விரக்தியின் விளிம்பில் சென்ற ஸ்டாலினுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. பிரசாந்த் கிஷோர் மூலம் அதிமுக அரசை ஒதுக்கிவிட்டு நாம் ஆட்சிக்கு வருவோமா என ஸ்டாலின் ஏங்குகிறார். சசிகலா சட்டத்தின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியில் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் ஒரு போதும் அவருக்கு இடமில்லை. கடை முழுவதும் சாத்தப்பட்டுவிட்டது என தெரிவித்தார். சசிகலாவுக்கு சிறைத் தண்டனை அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஆனால் நல்லொழுக்க அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. அது போல் அவர் திரும்பி வந்தால் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.