கே.எஸ்.அழகிரியின் குடும்ப டிரஸ்ட்.. அதற்குள் ஒரு சிக்கல்.. பரபரப்பு புகார்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் டிரஸ்ட் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் இதில் பெரிய பிரச்சினையெல்லாம் இல்லை என்று அழகிரி விளக்கியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்ட பிறகு அக்கட்சி ஆனானப்பட்ட நாடாளுமன்ற தேர்தலிலேயே கணிசமான தொகுதிகளில் வெற்றி, ஒழுங்கு நடவடிக்கைகள் என்று பாஸிடிவ் பாதையில் சென்று கொண்டிருக்கிறது! என்றும், பெரிய அளவில் கோஷ்டி மோதல் உள்ளிட்ட சிக்கல்கள் இல்லாமல் ஒருவித அமைதி நிலவுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இதற்கெல்லாம் திருஷ்டிப்பொட்டு வைக்கும் விதமாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக வெடித்திருக்கும் ஒரு பிரச்னைதான் அதிர வைத்துள்ளது அரசியலரங்கை. அதாவது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீரைப்பாளையத்தில், பெருந்தலைவர் காமராஜர் கடல்சார் அறிவியல் மற்றும் பொறியியல் நிலையம் என்ற கல்வி நிறுவனத்தை ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறது.

குடும்ப டிரஸ்ட்
இந்த டிரஸ்ட்டானது கே.எஸ். அழகிரிக்கு சொந்தமானது. இந்த டிரஸ்ட்டின் அறங்காவலர்களாக அழகிரியின் இரண்டு மனைவிகளான வத்சலா மற்றும் சாந்தி ஆகியோரும், மகள் அனுசுயாவும் இருக்கின்றனர். மகன் தமிழரசன் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இந்த கல்வி நிறுவனத்தின் மீது அலவாலா விஷ்ணுவர்தன் என்பவர் ‘சிறப்பான பயிற்சி, படிப்பு முடித்ததும் வேலை என்றெல்லாம் சொல்லி ஏமாற்றிவிட்டனர். மாணவர் சேர்க்கையிலும் விதிகளை மீறி நடந்து வருகின்றனர். அந்த வகையில் மட்டும் கிட்டத்தட்ட நாற்பத்து ரெண்டு கோடி வரை கட்டணமாக வசூல் செய்துள்ளனர். இவை அனைத்தும் தவறு.' என்று ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

விசாரணை
இப்போது இந்த புகாரை மத்திய அரசு விசாரிக்க துவங்கியுள்ளதாம். இந்த தகவலானது சோனியா காந்தியின் கவனத்துக்குப் போக, அவர் முகுல் வாஸ்னிக் மூலமாக கட்சி ரீதியான விசாரணையை நடத்தி முடித்துள்ளாராம். அந்த ஃபைல் சோனியாவின் பார்வைக்கு போயிருக்கிறது. சூழல் இப்படியிருக்கும் நிலையில், அந்த கல்வி நிறுவனத்தில் எந்த பிரச்னையுமில்லை. இந்த புகாரெல்லாம் ஜி.கே.வாசனின் கைங்கர்யம்தான் என்கிறார்கள்.

அறிக்கை
சமீபத்தில் மத்திய சென்னை மாவட்ட தலைவரான ரஞ்சன் குமார் என்பவர் ஜி.கே.வாசனை தாக்கு தாக்கென தாக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டார். தன் பெயரை இப்படி அவர் டேமேஜ் செய்ததன் பின்னணியில் கே.எஸ். அழகிரி இருக்கிறார் என்று வாசன் கோபபட்டார். அதன் வெளிப்பாடே இந்த புகார்! என்கிறார்கள்.

பிரச்சினையில்லை
இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கும் அழகிரியோ "ஆக்சுவலாக பிரச்னையே வேறு. அந்த டிரஸ்ட்டை எங்கள் குடும்பம்தான் நடத்துகிறது, அந்த பிரச்னையும் எங்கள் கல்லூரி விவகாரம்தான். ஆனால் மாணவர்களுக்கு உள்ளே நடக்கும் சிக்கலை வேறு விதமாக கிளப்பிவிட்டுள்ளனர். ஒரு மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோபமுற்ற அவர் எங்கள் நிர்வாகத்தின் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அதை எல்லோரும் ஊதி பெரிதாக்குகின்றனர். இந்த பிரச்னையின் பின்புலம் ஜி.கே.வாசன் தான் என்பது வெறும் வதந்தி. அவரால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று பதில் தந்துள்ளார்.
- ஜி.தாமிரா












Click it and Unblock the Notifications